துரைப்பாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை


துரைப்பாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை
x

துரைப்பாக்கம் அருகே பெண் அடித்துக்கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக 2-வது கணவர், கள்ளக்காதலனிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

சென்னை

சென்னையை அடுத்த துரைப்பாக்கம் அருகே உள்ள காரப்பாக்கம் கந்தசாமி நாயக்கர் தெருவில் வசித்து வந்தவர் மல்லிகா (வயது 40). இவருடைய கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மூத்த மகன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு குளத்தில் மூழ்கி இறந்து விட்டார். இளைய மகன் தனியாக வீடு வாடகைக்கு எடுத்து தங்கி, லாரியில் கிளினராக வேலை செய்து வருகிறார்.


மல்லிகா, கணவர் இறந்த பிறகு முருகன் என்பவரை 2-வதாக திருமணம் செய்து கொண்டு அவருடன் வசித்து வந்தார். இதற்கிடையில் கண்ணகி நகரை சேர்ந்த ஜெயக்குமார் என்பவருடன் மல்லிகாவுக்கு பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. கடந்த 5 ஆண்டுகளாக முருகன் வீட்டில் இல்லாத நேரத்தில் ஜெயக்குமார் வந்து மல்லிகாவுடன் உல்லாசமாக இருந்து வந்தார்.


இந்த நிலையில் நேற்று காலை மல்லிகாவை பார்க்க அவரது இளைய மகன் வீட்டுக்கு வந்தார். அப்போது முகம் மற்றும் தலையில் பலத்த காயத்துடன் மல்லிகா இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். அவர் அடித்துக்கொலை செய்யப்பட்டு கிடப்பது தெரிந்தது.


இது குறித்து தகவல் அறிந்து வந்த கண்ணகி நகர் போலீசார், மல்லிகா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


நேற்று முன்தினம் இரவு மல்லிகா வீட்டுக்கு ஜெயக்குமார் வந்துள்ளார். பின்னர் இருவரும் சேர்ந்து மது அருந்தியதாக கூறப்படுகிறது. அதன்பிறகுதான் மல்லிகா கொலையானது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்தது. எனவே ஜெயக்குமாருடன் ஏற்பட்ட தகராறில் மல்லிகா கொலை செய்யப்பட்டாரா? அல்லது ஜெயக்குமாருடன் மல்லிகா உல்லாசமாக இருந்ததை நேரில் பார்த்த ஆத்திரத்தில் முருகன் கொலை செய்தாரா? என்பது உள்பட பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இது தொடர்பாக மல்லிகாவின் 2-வது கணவர் முருகன், கள்ளக்காதலன் ஜெயக்குமார் ஆகிய இருவரிடமும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.


Next Story