12 நிபந்தனைகளுடன்கோபியில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்;1,000 போலீசார் பாதுகாப்பு


12 நிபந்தனைகளுடன்கோபியில் இன்று ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்;1,000 போலீசார் பாதுகாப்பு
x

12 நிபந்தனைகளுடன் கோபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.

ஈரோடு

கடத்தூர்

12 நிபந்தனைகளுடன் கோபியில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடக்கிறது. இதையொட்டி 1,000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் தெரிவித்து உள்ளார்.

ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம்

தமிழகத்தில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த சென்னை ஐகோர்ட்டு அனுமதி அளித்தது. இதற்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனுவை தள்ளுபடி செய்து, ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்துக்கு அனுமதி அளித்து ஐகோர்ட்டு உத்தரவிட்டது. இதனைத்தொடர்ந்து தமிழகத்தில் சென்னை உள்பட 45 இடங்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடத்த அந்த அமைப்பினர் முடிவு செய்துள்ளனர்.

அதன்படி ஈரோடு மாவட்டத்தில் கோபியில் இன்று மதியம் 2 மணிக்கு ஆர்.எஸ்.எஸ். ஊர்வலம் நடைபெற உள்ளது. இந்த ஊர்வலம் கோபி வாய்க்கால் மேடு ஸ்ரீவித்யா பள்ளிக்கூடத்தில் இருந்து தொடங்கி பார்க் வீதி, அரசு ஆஸ்பத்திரி வீதி, கச்சேரி வீதி, ஈரோடு- சக்திமெயின் ரோடு வழியாக முத்து மகாலில் நிறைவடைகிறது. சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு போலீசார் 12 நிபந்தனைகளை விதித்துள்ளனர்.

நிபந்தனைகள்

அதன்படி ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்தின் போது தனி நபர்களை குறிப்பிட்டோ, சாதி, மதம் பற்றியோ எந்த காரணம் கொண்டும் யாரும் தவறாக பேசக்கூடாது. இந்திய அரசால் தடை செய்யப்பட்ட அமைப்புகளுக்கு ஆதரவாக எந்தவித கருத்துகளையும் வெளிப்படுத்தி பேசக்கூடாது. நமது நாட்டின் இறையாண்மைக்கும், ஒருமைபாட்டுக்கும் ஊறு விளைவிக்கும் எந்த செயலையும் யாரும் செய்யக்கூடாது.

பொதுமக்களுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுத்தாத வகையில் ஊர்வலம் மற்றும் நிகழ்ச்சியை நடத்த வேண்டும். ஊர்வலத்தில் கலந்து கொள்பவர்கள் யாருக்கும் காயம் ஏற்படுத்த கூடிய வகையில் கம்பு மற்றும் ஆயுதங்கள் எதையும் கையில் ஏந்தி செல்லக்கூடாது.

கூம்பு வடிவ ஒலிபெருக்கி

ஊர்வலத்துக்கு ஏற்பாடு செய்திருப்பவர்கள் குடிநீர் வசதி, முதல் உதவி, நடமாடும் கழிவறைகள், கேமராக்கள், தீயணைப்பு கருவிகள் போன்றவற்றை ஏற்படுத்திக் கொள்ள போலீசார் மற்றும் உள்ளாட்சி அமைப்பினர்களுடன் கலந்து ஆலோசித்திருக்க வேண்டும். போலீஸ் அனுமதி அளித்துள்ள வழி தடத்தில் மட்டுமே ஊர்வலமாக செல்வதை ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் உறுதி செய்து கொள்ள வேண்டும்.

பெட்டி வடிவிலான ஒலிபெருக்கிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். ஒலி சத்தம் 15 வாட்ஸ்களுக்கு மிகாமல் இருப்பது அவசியம். கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்த கூடாது. ஊர்வலத்தில் செல்பவர்கள் மதம், மொழி, கலாசாரம் மற்றும் பிற குழுக்களின் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ளக்கூடாது என்பன உள்பட 12 நிபந்தனைகளை போலீசார் விதித்துள்ளனர்.

1,000 போலீசார் பாதுகாப்பு

இதுகுறித்து ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சசிமோகன் கூறியதாவது:-

கோர்ட்டு உத்தரவுபடி ஈரோடு மாவட்டத்தில் நாளை (அதாவது இன்று) கோபியில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். ஊர்வலத்திற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சட்ட ஒழுங்கு பாதிப்பு ஏற்படாத வகையில் எனது தலைமையில் 5 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், ஒரு கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு, 10 இன்ஸ்பெக்டர்கள் உள்பட 1,000-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

இதனால் கோபி முழுவதும் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். முக்கியமான பகுதிகளில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபடுவார்கள். ஊர்வலத்தையொட்டி ஆர்.எஸ்.எஸ். அமைப்பினருக்கு சில நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன. அதை அவர்கள் கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Related Tags :
Next Story