மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை


மனைவியின் மைத்துனர் கல்லால் தாக்கி கொலை
x
தினத்தந்தி 9 Oct 2023 8:30 PM GMT (Updated: 9 Oct 2023 8:31 PM GMT)

ஆனைமலை அருகே மனைவியின் மைத்துனரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கோயம்புத்தூர்
ஆனைமலை அருகே மனைவியின் மைத்துனரை கல்லால் தாக்கி கொன்றுவிட்டு தப்பி ஓடிய வாலிபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

கருத்து வேறுபாடு

கோவை மாவட்டம் ஆனைமலையை அடுத்த தாத்தூர் பகுதியை சேர்ந்தவர் உன்னி கிருஷ்ணன்(வயது 36). இவருடைய மனைவி கவிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர்.இதேபோன்று கவிதாவின் தங்கை சத்யா. அவரது கணவர் சசிகுமார்(33). அவர்களுக்கும் 2 குழந்தைகள் உள்ளனர்.இவர்கள் அனைவரும் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் ஆவர்.இந்த நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக உன்னி கிருஷ்ணனை பிரிந்து, அதே பகுதியில் உள்ள பெற்றோர் வீட்டில் கவிதா வசித்து வருகிறார்.

குடிபோதையில் தகராறு

இது தொடர்பாக கடந்த ஒரு வாரமாக சத்யாவின் கணவர் சசிகுமாருக்கும், கவிதாவின் கணவர் உன்னி கிருஷ்ணனுக்கும் தகராறு ஏற்பட்டு வந்தது.நேற்று அவர்கள் 2 பேரும் குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. மாலை 4 மணியளவில் தாத்தூர் வாட்டர் டேங்க் பகுதியில் அவர்கள் சந்தித்து கொண்டனர்.அப்போது திடீரென அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் சசிகுமார் ஆத்திரம் அடைந்து, உன்னி கிருஷ்ணனை தாக்கி கீழே தள்ளினார். பின்னர் கருங்கல்லை எடுத்து அவரது தலையில் போட்டார்.

வலைவீச்சு

இதில் பலத்த காயம் அடைந்த உன்னி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனே அங்கிருந்து சசிகுமார் தப்பி ஓடினார். இதுகுறித்து தகவல் அறிந்த ஆனைமலை போலீசார், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, உன்னிகிருஷ்ணனின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய சசிகுமாரை வலைவீசி தேடி வருகின்றனர்.



Next Story