வாரயிறுதி நாட்கள்: தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்


வாரயிறுதி நாட்கள்: தமிழகத்தில் இன்று சிறப்பு பேருந்துகள் இயக்கம்
x

தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் சேர்த்து கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை,

வாரயிறுதி நாட்கள் மற்றும் பவுர்ணமியை முன்னிட்டு தமிழகத்தில் இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வெளியிட்ட அறிக்கையில்,

இன்று (வெள்ளிக்கிழமை மற்றும் பௌர்ணமி) , நாளை (சனிக்கிழமை), 23ம் தேதி (ஞாயிறு) ஆகிய நாட்கள் சென்னையிலிருந்து இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் கூடுதல் சிறப்பு பேருந்துகளை இயக்க அரசு போக்குவரத்துக் கழகம் திட்டமிட்டுள்ளது.

சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு வரும் இன்று 600 பேருந்துகளும், நாளை 410 பேருந்துகளும் இயக்கப்படும். சென்னை கோயம்பேட்டிலிருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு வெள்ளிக்கிழமை அன்று 55 பேருந்துகளும், சனிக்கிழமை அன்று 80 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் இருக்கை மற்றும் படுக்கை வசதி, குளிர்சாதனம் கொண்ட 30 பேருந்துகள் சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று இயக்கப்படும். மேலும், சென்னை, மதுரை, சேலம், கோயம்புத்தூர், ஈரோடு, திருப்பூர், திருநெல்வேலி, நாகர்கோவில், தென்காசி, தூத்துக்குடி மற்றும் பெங்களூரு ஆகிய இடங்களிலிருந்து திருவண்ணாமலைக்கு அரசு பேருந்துகளில் முன்பதிவு செய்து பயணிக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

வாரயிறுதி நாட்களை முன்னிட்டு சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு இன்று 15 பேருந்துகளும், நாளை 15 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. பவுர்ணமியை முன்னிட்டு சென்னை மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து திருவண்ணாமலைக்கு 30 சிறப்பு பேருந்துகள் இன்று இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், ஞாயிறுக்கிழமை ஊருக்கு சென்ற மக்கள் சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது


Next Story