முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு


முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
x

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த பலத்த மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

தேனி

தமிழக-கேரள எல்லையில் முல்லைப்பெரியாறு அணை உள்ளது. தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்டங்களின் முக்கிய நீராதாரமாக இந்த அணை விளங்கி வருகிறது.

இந்தநிலையில் அணையின் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக மழை பெய்து வருகிறது. இதன் எதிரொலியாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. அதன்படி, முல்லைப்பெரியாறு அணைக்கு நேற்று முன்தினம் வினாடிக்கு 553 கன அடி வீதம் நீர்வரத்து இருந்தது. 2 நாட்களாக பெய்த மழையால் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1,426 கன அடியாக அதிகரித்தது. அதேபோல் அணையின் நீர்மட்டமும் உயர்ந்தது.

நேற்றைய நிலவரப்படி முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 127.15 அடியாக இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1,267 கன அடி வீதம் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேலும் தேனி மாவட்டத்தில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:- பெரியாறு 22.4, தேக்கடி 25.2, கூடலூர் 2.8, உத்தமபாளையம் 11.4, சோத்துப்பாறை 17, போடி 2.8, பெரியகுளம் 32.


Next Story