வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும்:இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை


வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும்:இந்து எழுச்சி முன்னணி கோரிக்கை
x
தினத்தந்தி 19 Jan 2023 6:45 PM GMT (Updated: 19 Jan 2023 6:45 PM GMT)

வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை போடியில் இருந்து இயக்க வேண்டும் என்று இந்து எழுச்சி முன்னணியினர் கோரிக்கை விடுத்தனர்.

தேனி

இந்து எழுச்சி முன்னணி தேனி மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி தலைமையில் நிர்வாகிகள் தேனி ரெயில் நிலையத்துக்கு நேற்று வந்தனர். ரெயில்வே பாதுகாப்பு ஆணையருக்கு அனுப்புவதற்காக ரெயில் நிலைய அலுவலர்களிடம் அவர்கள் ஒரு கோரிக்கை மனு கொடுத்தனர். அதில், "தேனி மாவட்ட மக்களின் நீண்டகால கோரிக்கையான சென்னையில் இருந்து தேனி மாவட்டத்துக்கு ரெயில் இயக்க வேண்டும் என்பதை நிறைவேற்றும் வகையில், சென்னை-போடி இடையே வருகிற பிப்ரவரி 19-ந்தேதி முதல் ரெயில் இயக்கப்பட உள்ளது.

இந்த சேவையால் மக்கள் மிகுந்த பயன் அடைவார்கள். விரைந்து நடவடிக்கை எடுத்த தென்னக ரெயில்வே பொதுமேலாளருக்கும், மத்திய அரசுக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். அதுபோல், மதுரையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் வைகை எக்ஸ்பிரஸ் ரெயிலை போடியில் இருந்து இயக்கினால் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். வைகை ஆறு உற்பத்தியாகும் தேனி மாவட்டத்தில் இருந்து அந்த ரெயிலை இயக்குவது மிகவும் பொருத்தமாகவும் இருக்கும்" என்று கூறியிருந்தனர்.


Related Tags :
Next Story