விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை

ரெயிலில் பட்டாசு கொண்டு செல்கின்றனரா? என்று விழுப்புரம் ரெயில் நிலையத்தில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர்.
இந்துக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றான தீபாவளி பண்டிகை வருகிற 24-ந் தேதி (திங்கட்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்து வருபவர்கள் அனைவரும் குடும்பத்தினர், உறவினர்களுடன் தீபாவளியை கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு புறப்பட்டுச்சென்ற வண்ணம் உள்ளனர்.
இவர்களில் பெரும்பாலானோர் ரெயிலில் பயணம் செய்கின்றனர். அவ்வாறு செல்லும் பயணிகள் எளிதில் தீப்பற்றக்கூடிய பட்டாசுகளை கொண்டு செல்லக்கூடும். இதனால் ஏதேனும் ஆபத்து ஏற்பட வாய்ப்பு உள்ளதால் ரெயில் பயணத்தின்போது பட்டாசு கொண்டு செல்ல போலீசார் தடை விதித்துள்ளனர்.
இந்நிலையில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு விழுப்புரம் வழியாக செல்லும் ரெயில்களில் பயணிகள் யாரேனும் பட்டாசுகளை கொண்டு செல்கின்றனரா? என்பதை கண்காணிக்க விழுப்புரம் ரெயில்வே போலீசார் மற்றும் ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். நேற்று சென்னை- திருச்சி செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ், சென்னை- குருவாயூர் செல்லும் குருவாயூர் எக்ஸ்பிரஸ் உள்பட பல்வேறு ரெயில்களில் ஒவ்வொரு பெட்டியாக போலீசார் தீவிர சோதனை செய்தனர்.
இந்த சோதனையில் விழுப்புரம் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வரதராஜன், ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜன், ரெயில்வே போலீஸ் தனிப்பிரிவு ஏட்டு ரவி, போலீசார் வீரபாலன், தீனதயாளன் உள்ளிட்டோர் ஈடுபட்டனர். இவர்களுடன் மோப்ப நாய் லக்கி உதவியுடன் வெடிகுண்டு கண்டறியும் குழுவினரும் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.