விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணி தொடர வேண்டும் - அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை டுவீட்..!


விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணி தொடர வேண்டும் - அன்புமணி ராமதாஸ், அண்ணாமலை டுவீட்..!
x

கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னை,

உடல்நலக்குறைவு காரணமாக தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 18-ந்தேதி அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு மார்பு சளி, இருமல் காரணமாக செயற்கை சுவாசக்கருவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. விஜயகாந்த் உடல்நிலை குறித்த வதந்திகள் பரவிவந்த நிலையில், விஜயகாந்த் வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காக சென்றுள்ளார் என்றும், ஓரிரு நாளில் வீடு திரும்புவார் என்றும் தேமுதிக தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், கடந்த 24 மணிநேரத்தில் விஜயகாந்த் உடல்நிலை சீரான நிலையில் இல்லாததால், அவருக்கு நுரையீரல் சிகிச்சைக்கான உதவி தேவைப்படுகிறது. அவர் விரைவில் பூரண உடல்நலம் பெறுவார் என்று நம்புகிறோம். அவருக்கு இன்னும் 14 நாட்கள் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை தேவைப்படுகிறது என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் உடல்நலம் பெற்று மக்கள் பணி தொடர வேண்டும் என்று இறைவனை வேண்டிக் கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "தேசிய முற்போக்கு திராவிட கழக நிறுவனத் தலைவர் கேப்டன் விஜயகாந்த், மருத்துவமனையில் தொடர் சிகிச்சையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்தி அறிந்து மிகுந்த வருத்தமடைந்தேன். அனைவரின் அன்புக்கும் உரித்தான கேப்டன் விஜயகாந்த் விரைவில் பூரண நலம் பெற்று, மக்கள் பணி தொடர, எல்லாம் வல்ல இறைவனை வேண்டிக் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள பதிவில், "உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னை மியாட் மருத்துவமனையில் மருத்துவம் பெற்று வரும் தேமுதிக தலைவர் விஜயகாந்த் விரைவில் முழுமையான உடல்நலம் பெற வேண்டும் என்ற எனது விருப்பத்தை தெரிவித்துக் கொள்கிறேன். அவர் வழக்கமான மக்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்றும் விரும்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.


Next Story