தூத்துக்குடியில் துணிகரம்:வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது


தினத்தந்தி 18 Aug 2023 6:45 PM (Updated: 18 Aug 2023 6:46 PM)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி

வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக பணம் மோசடி செய்தவர் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டு வேலை

விளாத்திகுளம் பூசனூரை சேர்ந்தவர் அருளப்பன். இவருடைய மகன் எபனேசர் (வயது 45). இவர் கடந்த 2021-ம் ஆண்டு விளாத்திகுளம் வேடப்பட்டியை சேர்ந்த தாழைச்சாமி மகன் தாளமுத்து (31) என்பவருடன் அறிமுகமாகி உள்ளார். அவர் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக ஆசைவார்த்தை கூறி உள்ளார். இதனை நம்பிய தாளமுத்து, எபனேசரிடம் ரூ.40 ஆயிரம் பணம் கொடுத்து உள்ளார். ஆனால் எபனேசர், தாளமுத்துக்கு வேலை வாங்கி தராமலும், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் மோசடி செய்து உள்ளார்.

மோசடி

இது குறித்து தாளமுத்து அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். தொடர்ந்து மோசடி செய்ததாக, எபனேசரை நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், எபனேசர் தூத்துக்குடியை சேர்ந்த 5 பேரிடம் வெளிநாட்டில் வேலைவாங்கி தருவதாக கூறி தலா ரூ.40 ஆயிரம் பணம் பெற்றுக் கொண்டு, போலி பணி நியமன ஆணையை கொடுத்து இருப்பதும் தெரியவந்தது. தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story