250 டன் யூரியா உரம் திருப்பூர் வந்தது


250 டன் யூரியா உரம் திருப்பூர் வந்தது
x
திருப்பூர்


திருப்பூர் மாவட்டத்துக்கு தூத்துக்குடியில் இருந்து 250 டன் யூரியா உரம் ரெயில் மூலம் திருப்பூர் வந்தது. உரக்கடைகளில் உரங்களை விதிமீறி விற்றால் விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும் என்று அதிகாரி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

250 டன் யூரியா உரம்

திருப்பூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் சின்னசாமி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழையையொட்டி ராபி பருவத்தில் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது. முக்கியமாக நெல் மற்றும் மக்காச்சோள பயிர்கள் அக்டோபர், நவம்பர் மாதங்களில் பயிரிடப்படுகிறது. நடப்பு பருவத்தில் செப்டம்பர் மாதத்திற்கு தேவையான யூரியா உரம் 250 டன் தூத்துக்குடியில் இருந்து ரெயில் மூலம் திருப்பூர் மாவட்டத்துக்கு வரவழைக்கப்பட்டு கூட்டுறவு சங்கங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

தற்போது வரப்பெற்றுள்ள உரங்களுடன் திருப்பூர் மாவட்டத்தில் யூரியா உரம் 1,872 டன்னும், டி.ஏ.பி. உரம் 1,201 டன்னும், பொட்டாஷ் உரம் 932 டன்னும், காம்ப்ளக்ஸ் உரம் 4,633 டன்னும், சூப்பர் பாஸ்பேட் உரம் 602 டன்னும் போதியளவு இருப்பில் உள்ளது.

உயிர் உரம்

அவினாசி வட்டாரத்தில் உயிர் உர உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டு அனைத்து பயிர்களுக்கும் தேவையான உரம் தயாரிக்கப்பட்டு மாவட்டம் முழுவதும் வேளாண்மை விரிவாக்க மையங்களின் மூலமாக விவசாயிகளுக்கு வினியோகிக்கப்பட்டு வருகிறது. உயிர் உரங்களை பயன்படுத்துவதன் மூலமாக மண்வளம் மேம்படுகிறது. உரத்தேவையையும் 25 சதவீதம் அளவுக்கு குறைத்துக்கொள்ளலாம்.

உரங்களை விற்பனை முனை எந்திரம் மூலம் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. விவசாயிகள் விரும்பும் உரங்களை விற்பனையாளர்கள் கொடுக்க வேண்டும். வற்புறுத்தி கூடுதலாக உரங்களை விற்பனை செய்யக்கூடாது. உரிய விலைக்கு உரங்களை விற்பனை செய்வது அவசியம். கடை அறிவிப்பு பலகையில் உர இருப்பு விவரங்களை விவசாயிகளின் பார்வைக்கு தெரியும் படி வைக்க வேண்டும்.

விற்பனை உரிமம் ரத்து

உரக்கட்டுப்பாட்டு விதிமுறைகளை மீறி விற்பனை செய்தால் உரக்கட்டுபாட்டு விதிகளின் படி உர விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விற்பனை உரிமம் ரத்து செய்யப்படும். விவசாயிகள் உரக்கடைகளில் தங்கள் ஆதார் எண்ணை கொடுத்து விற்பனை முனை எந்திரம் மூலமாக வழங்கப்படும் ரசீதில் உள்ள விலையை செலுத்தி ரசாயன உரங்களை வாங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story