"தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை" - எல்.முருகன் தாக்கு


தமிழகத்தில் தலைவிரித்தாடும் தீண்டாமை கொடுமை - எல்.முருகன் தாக்கு
x

கோப்புப்படம்

தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு முதல்-அமைச்சர் என்ன பதில் சொல்லப்போகிறார்..? என்று எல்.முருகன் கேள்வி எழுப்பி உள்ளார்.

சென்னை,

மத்திய இணை மந்திரி எல். முருகன் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

தலைவரித்தாடும் தீண்டாமை கொடுமை. மனித நாகரீகம் அருவெறுக்கச் செய்யும் செயலை தடுத்து நிறுத்த திராணியற்ற போலி திராவிட மாடல் ஆட்சி. தமிழ்நாட்டில் குடிநீர் தொட்டிகளில் மலம், மாட்டுச்சாணம் போன்றவற்றை கலக்கும் நிகழ்வுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. கல்வி எனும் அறிவு தீபத்தை ஏற்றும் பள்ளிகளில் மலம் பூசும் அவலங்கள் அடுத்தடுத்து அரங்கேறி வருகின்றன.

தமிழகத்தின் பலப்பகுதிகளில் தீண்டாமை, இரட்டைக்குவளை, இரட்டை சுடுகாடு, கோயில்களுக்குள் பட்டியலின மக்கள் செல்ல முடியாத சூழல் நிலவுகிறது. அரசு பள்ளிகளில் பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. தமிழகம் முழுவதும் அரசுப் பள்ளிகளில் சுற்றுச்சுவர், இரவுக் காவலாளி இல்லாததால் மது அருந்துவோரின் கூடாரமாக பள்ளிகள் மாறி வருகின்றன.

உலகின் பல பகுதிகளில் இல்லாத இந்த மாபெரும் சமூக அநீதி தொடர்ந்து நிகழ்வது திமுகவினர் திராவிட பெருமை பேசும் தமிழகத்தில் தான் என்பது வேதனையான ஒன்று. திராவிட மாடல் சாதனை ஆட்சி நடத்துவதாக தற்பெருமை பேசும் தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு என்ன பதில் சொல்லப்போகிறார்..?

இவ்வாறு அதில் கேள்வி எழுப்பி உள்ளார்.




Next Story