புயல் கரையை கடக்கும் வரை.... பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை


புயல் கரையை கடக்கும் வரை.... பொதுமக்கள் வெளியே வரவேண்டாம் - காவல்துறை எச்சரிக்கை
x
தினத்தந்தி 2 Dec 2023 10:20 AM GMT (Updated: 2 Dec 2023 10:35 AM GMT)

புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரைபொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

நேற்று தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது மேலும் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புயலாக வலுப்பெறக்கூடும்.

அதன் பிறகு வடமேற்கு திசையில் நகர்ந்து முற்பகல் தெற்கு ஆந்திரா மற்றும் அதனை ஒட்டிய வடதமிழக கடலோரப்பகுதிகளில் நிலவக்கூடும். பிறகு கடலோரப்பகுதிகளை ஒட்டி வடக்கு திசையில் நகர்ந்து, வரும் 5 ஆம் தேதி தெற்கு ஆந்திரா கடற்கரையை நெல்லூருக்கும், மசூலிபட்டினத்திற்கும் இடையே புயலாக கடக்கக்கூடும். இந்த புயல் சின்னத்திற்கு மிக்ஜம் என்று பெயரிடப்பட்டுள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களுக்கும் நாளை மிக கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

இந்த நிலையில் புயல் கரையை கடந்துவிட்டதாக அதிகாரபூர்வ அறிவிப்பு வரும்வரைபொதுமக்கள் வெளியே வர வேண்டாம் என சென்னை காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் சமூக வலைதளங்களில் புயல் தொடர்பாக பரவும் வதந்திகளை நம்ப வேண்டாம் எனவும் பொதுமக்கள் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் எனவும் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.


Next Story