மணப்பாடு கடலில் பிணமாக மீட்கப்பட்ட மீனவர் உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் அஞ்சலி


மணப்பாடு கடலில் பிணமாக மீட்கப்பட்ட மீனவர் உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் அஞ்சலி
x
தினத்தந்தி 9 Oct 2023 6:45 PM GMT (Updated: 9 Oct 2023 6:46 PM GMT)

மணப்பாடு கடலில் பிணமாக மீட்கப்பட்ட மீனவர் உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

கன்னியாகுமரி

குளச்சல்,

மணப்பாடு கடலில் பிணமாக மீட்கப்பட்ட மீனவர் உடலுக்கு மத்திய மந்திரி எல்.முருகன் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர்

குமரி மாவட்டம் குளச்சல் துறைமுகத் தெருவை சேர்ந்தவர் பி.ஆரோக்கியம் (வயது 50). இவர் சொந்தமாக விசைப்படகு வைத்து கடலில் மீன்பிடித்தொழில் செய்து வருகிறார்.

இந்த படகில் பங்குதாரரான மாதா காலனியை சேர்ந்த ஆன்றோ (47) மற்றும் அதே பகுதியை சேர்ந்த கே.ஆரோக்கியம் (52), கொட்டில்பாடை சேர்ந்த பயஸ் (54) உள்பட 16 பேர் கடந்த 25-ந் தேதி குளச்சல் மீன்பிடித்துறைமுகத்தில் இருந்து ஆழ்கடல் பகுதிக்கு மீன்பிடிக்க சென்றனர்.

பின்னர் 28-ந் தேதி நள்ளிரவு தூத்துக்குடி மாவட்டம் மணப்பாடு கடல் பகுதியில் இருந்து சுமார் 30 நாட்டிக்கல் கடல் மைல் தூரத்தில் விசைப்படகில் இருந்தபடி மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர்.

2 மீனவர்கள் பிணமாக மீட்பு

அப்போது திடீரென விசைப்படகு ஒரு பக்கமாக சாய்ந்து கவிழ்ந்ததில் ஆன்றோ, கே.ஆரோக்கியம், பயஸ் ஆகிய 3 மீனவர்களை மீட்க முடியவில்லை. மற்ற 13 மீனவர்கள் மீட்கப்பட்டனர். பின்னர் குளச்சலில் இருந்து விசைப்படகில் சென்ற மீனவர்கள் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்ட போது பயஸ் பிணமாக மீட்கப்பட்டார். ஆனால் மற்ற 2 பேரை பற்றி எந்தவொரு தகவலும் இல்லை.

பின்னர் 10 நாட்களுக்கு பிறகு கடற்படை துணையுடன் மீனவர்கள் தேடினர். அப்போது விசைப்படகு மூழ்கிய இடத்தில் 50 மீட்டர் ஆழத்தில் ஒரு உடல் மீட்கப்பட்டது. அந்த உடல் அழுகிய நிலையில் இருந்ததால் அவர் யாரென்று தெரியவில்லை.

அடையாளம் தெரிந்தது

இந்தநிலையில் அந்த உடல் விசைப்படகு மூலமாக குளச்சல் மீன் பிடித்துறைமுகத்திற்கு நேற்று காலையில் கொண்டு வரப்பட்டது.

பின்னர் குளச்சல் கடலோர பாதுகாப்பு குழும போலீஸ் இன்ஸ்பெக்டர் நவீன், சப்-இன்ஸ்பெக்டர் சுரேஷ் ஆகியோர் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் பலியானவர் ஆன்றோ என்பது தெரியவந்தது. ஆன்றோவுக்கு ஏற்கனவே விபத்து ஒன்றில் வலது காலில் 'பிளேட்' வைத்து அறுவை சிகிச்சை செய்யப்பட்டிருந்ததை குடும்பத்தினர் தெரிவித்தனர். அதேபோல் மீட்கப்பட்ட உடலிலும் பிளேட் இருந்தது. அதனை வைத்து தான் மீனவர் ஆன்றோ என்பதை போலீசாரும் உறுதி செய்தனர். இதனை தொடர்ந்து கடலில் மூழ்கிய கே.ஆரோக்கியம் உடலை தேடும் பணி தொடர்ந்து நடக்கிறது.

உடலுக்கு அஞ்சலி

இதற்கிடையே குளச்சல் மீனவர் ஆன்றோ உடல் பிரேத பரிசோதனைக்கு பிறகு நேற்று மதியம் சொந்த ஊருக்கு கொண்டு வரப்பட்டு வீட்டு முன்பு அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. அப்போது மத்திய மீன்வளத்துறை இணை மந்திரி எல்.முருகன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், தி.மு.க. மாநில மீனவர் அணி செயலாளர் ஏ.ஜெ.ஸ்டாலின் ஆகியோர் ஆன்றோ உடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட பா.ஜ.க. தலைவர் தர்மராஜ், மாநில செயலாளர் மீனாதேவ், மாவட்ட பஞ்சாயத்து துணைத்தலைவர் சிவகுமார், கல்குளம் தாசில்தார் கண்ணன், குளச்சல் வருவாய் ஆய்வாளர் முத்துபாண்டி, கிராம அலுவலர் ராஜேஷ், நகர பா.ஜ.க. தலைவர் சி.கண்ணன், நகர்மன்ற துணைத்தலைவர் ஷெர்லி பிளாரன்ஸ் மற்றும் கவுன்சிலர்கள், பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர். பின்னர் புனித காணிக்கை அன்னை திருத்தலத்தில் திருப்பலி நிறைவேற்றப்பட்டு திருத்தல மயான வளாகத்தில் அடக்கம் செய்யப்பட்டது.


Next Story