கடலூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு - 500 கிலோ வெடிமருந்து பறிமுதல்


கடலூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிப்பு - 500 கிலோ வெடிமருந்து பறிமுதல்
x

கடலூர் அருகே அனுமதியின்றி பட்டாசு தயாரிக்க வைத்திருந்த 500 கிலோ வெடி மருந்து பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூர்,

கடலூர் அருகே உள்ள நொச்சிக்காடு பகுதியைச் சேர்ந்த ராஜேஷ் மற்றும் அவரது சகோதரர் ரமேஷ் ஆகிய இருவரும் பட்டாசு விற்பனைக்கான உரிமத்தைப் பெற்றுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும் சிவகாசியில் இருந்து கொண்டு வரப்படும் பட்டாசுகளை இவர்கள் விற்பனை செய்து வந்துள்ளனர்.

இந்த ஆண்டும் பட்டாசு விற்பனைக்கான உரிமத்தை இவர்கள் புதுப்பித்துள்ளனர். இந்நிலையில், இவர்கள் அந்த பகுதியிலேயே பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு புகார் வந்தது.

இந்த புகாரின் அடிப்படையில், போலீசார் நொச்சிக்காடு பகுதியில் உள்ள ராஜேஷ் மற்றும் ரமேஷ் ஆகியோருக்கு சொந்தமான இடத்தில் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில், அவர்கள் உரிய அனுமதியின்றி வெடி மருந்துகளை பயன்படுத்தி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.

அங்கு சுமார் 10-க்கும் மேற்பட்ட மூட்டைகளில், 500 கிலோ வெடி மருந்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர். இதையடுத்து, வருவாய்த்துறையினர் அந்த பகுதிக்கு வந்து வெடி மருந்துகளை அப்புறப்படுத்தும் பணியில் ஈடுபட்டனர். குடியிருப்பு பகுதியில் உரிய பாதுகாப்பு எதுவும் இன்றி பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்ட உரிமையாளர்களை போலீசார் தேடி வருகின்றனர்.



Next Story