வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கிலோவிற்கு ரூ.22 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.68-க்கு விற்பனை


வரத்து அதிகரிப்பால்தக்காளி விலை கிலோவிற்கு ரூ.22 குறைந்ததுதர்மபுரி உழவர் சந்தையில் கிலோ ரூ.68-க்கு விற்பனை
x
தினத்தந்தி 3 Aug 2023 7:00 PM GMT (Updated: 3 Aug 2023 7:01 PM GMT)
தர்மபுரி

தக்காளி வரத்து அதிகரித்ததால் அதன் விலை ஒரே நாளில் கிலோவிற்கு ரூ.22 குறைந்தது. தர்மபுரி உழவர் சந்தையில் நேற்று 1 கிலோ ரூ.68 - க்கு விற்பனை செய்யப்பட்டது.

பொதுமக்களுக்கு பாதிப்பு

தக்காளி அதிகம் விளையும் பகுதிகளில் ஒன்றான தர்மபுரி மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக வெயிலின் தாக்கத்தால் தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டது. இதனால் தர்மபுரி மாவட்ட உழவர் சந்தைகளில் கடந்த மாதம் தக்காளி விலை ரூ.100- ஐ தொட்டது. வெளி மார்க்கெட்டில் ரூ.120 முதல் ரூ.130 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது.

தக்காளியின் விலை கடுமையாக உயர்ந்ததால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டது. ஏழை, எளிய மக்கள் மற்றும் நடுத்தர மக்கள் வீடுகளில் உணவு சமைப்பதற்கு தக்காளியை அதிக அளவில் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இந்த நிலையில் ரேஷன் கடைகள் மூலம் தக்காளியை விற்பனை செய்ய அரசின் சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

விலை குறைந்தது

தர்மபுரி மாவட்டத்தில் கூட்டுறவு துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 10 ரேஷன் கடைகளில் கடந்த 1- ந்தேதி முதல் 1 ஒரு கிலோ தக்காளி ரூ.60-க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் கடந்த ஓரிரு நாட்களாக சந்தைக்கு தக்காளி வரத்து மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. நேற்று முன் தினம் தர்மபுரி உழவர் சந்தையில் அதிகபட்சமாக கிலோ ரூ.90-க்கு விற்பனையான தக்காளி நேற்று கிலோவுக்கு ரூ.22 குறைந்தது.

நேற்று 1 கிலோ தக்காளி ரூ.68- க்கு விற்பனை செய்யப்பட்டது. வெளி மார்க்கெட்டுகளில் ரூ.75 முதல் ரூ.85 வரை பல்வேறு விலைகளில் விற்பனை செய்யப்பட்டது. தர்மபுரி உழவர் சந்தையில் தக்காளி விலை நேற்று கணிசமாக குறைந்ததால் அதன் விற்பனை சற்று அதிகரித்தது.


Next Story