தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்


தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் அறிவுறுத்தல்
x

தோட்டக்கலை உயர் அலுவலர்களுடன் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஆய்வு கூட்டம் நடத்தினார்.

சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமையில் தோட்டக்கலை துறையின் மூலம் செயல்படுத்தப்பட்டு வரும் பல்வேறு திட்டங்கள் குறித்து இன்று (13.08.2024) சென்னை, சேப்பாக்கம் தோட்டக்கலைத்துறை இயக்குநரகத்தில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் தோட்டக்கலை பயிர்களின் சாகுபடி பரப்பு குறித்து மாவட்ட வாரியாக அமைச்சர் ஆய்வு மேற்கொண்டார்.

தோட்டக்கலை பயிர் சாகுபடி

இடம் சார்ந்த விவசாயம் மேற்கொள்ள வேண்டும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட சென்னையில் காய்கறி வரத்தை அதிகரிக்கும் நோக்கத்தோடு அனைத்து அலுவலர்களும் செயல்படவேண்டும் எனவும் வலியுறுத்தி பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். மேலும், தோட்டக்கலை பயிர்களின் சாகுபடியை விரிவுபடுத்த அனைத்து அலுவலர்களும் உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்றும், கீரைகள் மற்றும் காய்கறிகள் சாகுபடியை ஊக்குவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

தோட்டக்கலைத் துறையின் கீழ் பராமரிக்கப்பட்டு வரும் அனைத்து தோட்டக்கலைப் பண்ணைகளின் உற்பத்தியை அதிகரிக்கவும், புதிய ரக பழச் செடிகளை நடவு செய்யவும் வலியுறுத்தினார். மேலும், நடப்பாண்டில் அனைத்து மாவட்டங்களிலும் நல்ல மழைப்பொழிவு இருப்பதால் அனைத்துத் தோட்டக்கலைத் திட்டங்களுக்கான பழச்செடிகளையும் உடனடியாக விவசாயிகளுக்கு விநியோகம் செய்திட வேண்டும் எனவும், அனைத்துத் திட்டங்களையும் விரைந்து முடித்திடவும் அமைச்சர் அறிவுரை வழங்கினார்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை

அதனைத் தொடர்ந்து, பூங்காக்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு, கலைஞர் நூற்றாண்டு பூங்காவின் கட்டமைப்பு பணிகளை துரிதப்படுத்தி முடித்திட அறிவுறுத்தினார். பருவமழை காலங்களிலும், பருவமற்ற காலங்களிலும் பெய்யும் மழை பொழிவினால் ஏற்படும் சேதங்களைத் தடுக்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளவும், விவசாயிகளை நேரில் சந்தித்து உரிய ஆலோசனை வழங்கவும் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

கடந்த மூன்று ஆண்டுகளில் அறிவிக்கப்பட்ட அறிவிப்புகளின் சாதனை விவரங்கள் குறித்து மாவட்டம் வாரியாக ஆய்வு மேற்கொண்டு, நிலுவையில் உள்ள பணிகளை விரைந்து முடித்திடுமாறு அறிவுறுத்தினார். மேலும், தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கி வரும் மகத்துவ மையங்களின் தற்போதைய செயல்பாடுகளையும் தோட்டக்கலை பயிற்சி மையங்களின் பயிற்சி குறித்தும் கேட்டறிந்தார். புதிய தொழில்நுட்பங்களை அனைத்து மகத்துவமையங்களிலும் செயல் விளக்கம் செய்யவும் விவசாயிகளுக்கு பயிற்சி அளிக்கவும் ஆலோசனை வழங்கினார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story