டி.என்.பி.எஸ்.சி. குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர்


பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் நடந்த குரூப்-1 தேர்வினை 2,228 பேர் எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுதவில்லை.

பெரம்பலூர்

குரூப்-1 தேர்வு

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் (டி.என்.பி.எஸ்.சி.) சார்பில் ஒருங்கிணைந்த குடிமை பணிகள் தொகுதி-1-ல் (குரூப்-1) துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான முதல் நிலை தேர்வு தமிழகம் முழுவதும் நேற்று நடந்தது.

அதன்படி குரூப்-1 தேர்வினை எழுத பெரம்பலூர் மாவட்டத்தில் 3,406 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதையடுத்து,12 மையங்களில் குரூப்-1 தேர்வு நேற்று நடந்தது.தேர்வு அறைக்குள் தேர்வாளர்களை 9 மணி வரை மைய கண்காணிப்பாளர்கள் அனுமதித்தனர். சரியாக காலை 9.30 மணியளவில் தொடங்கிய தேர்வு மதியம் 12.30 மணி வரை நடந்தது.

200 கொள்குறி வகை வினாக்கள் கேட்கப்பட்டு, 300 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடந்தது.

1,178 பேர் எழுத வரவில்லை

பெரம்பலூர் மாவட்டத்தில் 2,228 பேர் குரூப்-1 தேர்வினை எழுதினர். 1,178 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு எழுத முடியாத மாற்றுத்திறனாளி தேர்வாளர்களுக்கு தேர்வு எழுத உதவியாளர்கள் நியமிக்கப்பட்டனர். இந்த தேர்வினை கண்காணிப்பதற்காக துணை கலெக்டர் நிலையில் பறக்கும் படை அலுவலர்களும், இயங்கு குழுக்கள் மற்றும் கண்காணிப்பாளர், உதவியாளர் நிலையில் தேர்வுக்கூட நடைமுறைகளை கண்காணித்திட ஆய்வு அலுவலர்களும் தேர்வு பணியில் ஈடுபட்டிருந்தனர். தேர்வு நடவடிக்கைகள் முழுவதும் வீடியோகிராபர்கள் மூலமாக ஒளிப்பதிவு செய்யப்பட்டது.

பெரம்பலூரில் நடந்த குரூப்-1 தேர்வினை ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரியும், தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணைய தலைவருமான டாக்டர் முனியநாதன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் மாவட்டங்களில் தேர்வு பாதுகாப்பு பணிகளில் போலீசாரும், துப்பாக்கி ஏந்திய போலீசாரும் ஈடுபட்டனர். அனைத்து தேர்வு மையங்களிலும் குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகளும் மேற்கொள்ளப்பட்டிருந்தன.

தேர்வு எப்படி இருந்தது?

பெரம்பலூர் மாவட்டம் சிறுவயலூரை சேர்ந்த பாலமுருகன் கூறுகையில், குரூப்-1 தேர்வு எளிதாகவும் இல்லை, மிக கடினமாகவும் இல்லை. இந்த தேர்வுக்கு என்று படித்தவர்களுக்கும், பயிற்சி மையம் சென்று படித்தவர்களுக்கும் எளிதாக இருந்திருக்கும், என்றார்.

நாட்டார்மங்கலத்தை சேர்ந்த பிருந்தா கூறுகையில், முதல் முறையாக குரூப்-1 தேர்வு எழுதியுள்ளேன். கொஞ்சம் பயமாக இருந்தது. குரூப்-1 தேர்வு சற்று கடினமாக தான் இருந்தது. வரலாறு பாடப்பிரிவில் இருந்து அதிக கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. கணித பாடப்பிரிவில் இருந்து எளிதான கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. தேர்வு எழுத நேரம் போதாது. மத்திய அரசு போட்டி தேர்வுக்கு இணையாக தமிழக அரசும் போட்டி தேர்வுக்கு கேள்விகளை கேட்டு வருவதால், இனிவரும் காலங்களில் போட்டி தேர்வுக்கு மனப்பாடம் செய்தோ அல்லது வாசித்து வந்தோ எழுத முடியாது. புரிந்து படித்தால் மட்டுமே தேர்வினை எதிர்கொள்ள முடியும், என்றார்.


Next Story