விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி


விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் மும்முனைப் போட்டி
x

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அ.தி.மு.க.வை தொடர்ந்து தே.மு.தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்ததால் மும்முனைப் போட்டி உறுதியாகியுள்ளது.

சென்னை,

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி (வயது 70) உடல் நலக்குறைவால் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி மரணம் அடைந்தார்.இதனைத்தொடர்ந்து, அதே மாதம் 8-ந் தேதி, விக்கிரவாண்டி தொகுதி காலியானதாக தேர்தல்கமிஷன் அறிவித்தது.

பொதுவாக, ஒரு தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டால், அடுத்த 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தியாக வேண்டும்.அந்த வகையில், நாடாளுமன்ற தேர்தல் முடிந்து, முடிவுகள் அறிவிக்கப்பட்ட நிலையில், சூட்டோடு சூட்டாக விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலும் அறிவிக்கப்பட்டது. இதன்படி அடுத்த மாதம் (ஜூலை) 10-ந்தேதி இடைத்தேர்தல் நடக்கிறது.

இடைத்தேர்தலையொட்டி கடந்த 14-ந் தேதி வேட்பு மனு தாக்கல் தொடங்கியது. வரும் 21-ந் தேதி வேட்புமனு தாக்கலுக்கு கடைசி நாளாகும். இந்த இடைத்தேர்தலில், நாடாளுமன்ற தேர்தலை போலவே 4 முனைப் போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்பட்டது.அதாவது தி.மு.க., அ.தி. மு.க., பா.ஜனதா தலைமையில் தலா ஒரு அணிகளும், நாம் தமிழர் கட்சி தனித்தும் போட்டியிடும் என்று கூறப்பட்டது. தி.மு.க. கூட்டணி சார்பில், அக்கட்சி வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டார்.

பா.ஜனதா கூட்டணியில் அங்கம் வகிக்கும் பா.ம.க. சார்பில் சி.அன்புமணியும், நாம் தமிழர் கட்சி சார்பில் டாக்டர் அபிநயாவும் வேட்பாளராக அறிவிக்கப்பட்டனர். அ.தி.மு.க. கூட்டணி சார்பில் யார் போட்டியிடுவார்? என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் சென்னையில் அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டம் நடைபெற்றது. அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை அ.தி.மு.க. புறக்கணிப்பதாக முடிவு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதே சமயம் அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வின் நிலை என்ன? என்றும் எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில், தே.மு.தி.க. வும் விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிப்பதாக நேற்று அறிவித்துள்ளதுவிக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலை தே.மு. தி.க.வும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ள நிலையில், அங்கு மும்முனை போட்டி நிலவுவது உறுதியாகி உள்ளது. தி.மு.க., பா.ம.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.


Next Story