உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு


உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கீடு
x
தினத்தந்தி 9 Aug 2023 10:00 PM GMT (Updated: 9 Aug 2023 10:00 PM GMT)

தமிழகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

நீலகிரி

ஊட்டி

தமிழகத்தில் உண்டு உறைவிட பள்ளிகளை மேம்படுத்த ரூ.40 கோடி ஒதுக்கப்பட்டு உள்ளது என்று அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தெரிவித்தார்.

நலத்திட்ட உதவிகள்

உலக பூர்வீக குடிகளின் சர்வதேச தின விழா நீலகிரி மாவட்டம் ஊட்டியில் உள்ள பழங்குடியினர் பண்பாட்டு மையத்தில் நேற்று நடைபெற்றது. விழாவுக்கு கலெக்டர் அம்ரித் முன்னிலை வகித்தார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் கயல்விழி செல்வராஜ் தலைமை தாங்கி பழங்குடியின மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாட்டில் 37 வகையான பழங்குடியின மக்கள் உள்ளனர். 2011-ம் ஆண்டு கணக்கெடுப்பின் படி 8 லட்சம் பழங்குடியினர்கள் உள்ளனர். இயற்கையை பாதுகாத்து, பழங்குடியினர் அடுத்த சந்ததியினருக்கு கொண்டு சேர்க்கின்றனர். பழங்குடியினரின் எதிர்காலமான இளைஞர்களின் வளர்ச்சி தான் மிகவும் முக்கியம். கல்வி மற்றும் வேலைவாய்ப்புக்காக இளைஞர்கள் தனித்திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும்.

தனிநபர் உரிமைகள்

பழங்குடியினர் நலத்துறை மூலம் 320 உண்டு உறைவிடப்பள்ளிகள், 48 விடுதிகள் செயல்படுகிறது. இதில் 30 ஆயிரம் மாணவர்கள் படிக்கின்றனர். 8 ஏகலைவா பள்ளிகளில் 2,600 மாணவர்கள் படிக்கின்றனர். வகுப்பறை, ஆய்வகம், கழிப்பிட வசதிகளை மேம்படுத்த ரூ.40 கோடி நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது. கல்லூரி மாணவர்களுக்காக 4 புதிய விடுதிகள் கட்டப்படுகிறது.

தமிழகத்தில் ஆதிதிராவிடர், பழங்குடியின மக்களுக்காக ரூ.539 கோடி மதிப்பில் 14,620 வீடுகள் கட்டப்படுகிறது. இதில் 7,000 வீடுகளின் கட்டுமானப்பணி நிறைவடைந்து உள்ளது. வன உரிமை சட்டத்தின் கீழ் 20 ஆயிரத்து 811 தனி நபர் உரிமைகளும், 1,014 சமுதாய உரிமைகளும் வழங்கப்பட்டு உள்ளன. மேலும் சாதி சான்றிதழ் பிரச்சினைகளை களையவும், உண்மை தன்மையை சரிபார்க்கவும் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 3,000 விண்ணப்பங்கள் பெறப்பட்டு, 1,190 விண்ணப்பங்கள் சரிபார்க்கப்பட்டன. இவ்வாறு அவர் கூறினார்.

கல்லூரி விடுதியில் ஆய்வு

முன்னதாக ஆதிவாசிகள் நலச்சங்க செயலாளர் ஆல்வாஸ் வரவேற்றார். இதில் தாட்கோ தலைவர் மதிவாணன், முதுமலை புலிகள் காப்பக கள இயக்குனர் வெங்கடேஷ், நீலகிரி மாவட்ட வன அலுவலர் கவுதம், கூடலூர் வன அலுவலர் கொம்மு ஓம்காரம், முதுமலை புலிகள் காப்பக துணை இயக்குனர்கள் வித்யா, அருண்குமார், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் செல்வகுமார், ஆர்.டி.ஓ. துரைசாமி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

முன்னதாக அமைச்சர் கயல்விழி செல்வராஜ் ஊட்டி பழங்குடியின கல்லூரி மாணவிகள் விடுதியை ஆய்வு செய்தார். மேலும் ஊட்டியில் புதிய கல்லூரி விடுதி அமைய உள்ள இடத்தில் ஆய்வு மேற்கொண்டார்.


Next Story