அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும் - தமிழ்நாடு அரசு பதில் மனு


அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்  - தமிழ்நாடு அரசு பதில் மனு
x
தினத்தந்தி 3 Feb 2023 1:21 PM GMT (Updated: 3 Feb 2023 1:23 PM GMT)

மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

சென்னை,

முன்னாள் முதல்-அமைச்சரும், மறைந்த தி.மு.க. தலைவருமான கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் அண்ணா நினைவிட வளாகத்தில் 2.23 ஏக்கர் பரப்பளவில் அரசு சார்பில் நினைவிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த பணிகள் ஒருபுறம் நடந்து கொண்டிருக்க நடுக்கடலிலும் ரூ.81 கோடி செலவில் 134 அடி உயரத்துக்கு பிரமாண்ட 'பேனா' நினைவுச் சின்னம் அமைக்க தமிழக அரசு திட்டமிட்டது. இந்த பிரமாண்ட நினைவு சின்னத்துக்கு முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் பேனா நினைவு சின்னம் என்று பெயரிடப்பட்டு உள்ளது. இந்த நினைவு சின்னம் அமைக்க மத்திய அரசின் கடலோர ஒழுங்குமுறை ஆணையம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அனுமதி பெற விண்ணப்பிக்கப்பட்டது.

இதில் மத்திய அரசின் முதற்கட்ட அனுமதி கிடைத்ததை தொடர்ந்து அடுத்த கட்டமாக பொதுமக்களின் கருத்தை கேட்க அரசு முடிவு செய்தது. இந்த நிலையில், பேனா நினைவு சின்னம் குறித்து கருத்து கேட்பு கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் இன்று காலை தொடங்கியது. கூட்டத்தில் மாசுக்கட்டுப்பாட்டு வாரியம், சுற்றுச்சூழல் உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சார்ந்த அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதில் தங்களது தரப்பு கருத்தை முன்வைக்க பாஜக, ஆம் ஆத்மி, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பேனா நினைவு சின்னத்திற்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் குரல் எழுப்பப்பட்டது.

மேலும் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தென் மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் வழக்கும் தொடரப்பட்டது,

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் பேனா நினைவுச் சின்னத்திற்கு தடைகோரி தொடரப்பட்ட வழக்கில் தமிழ்நாடு அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது.

அதில் அனைத்து ஒப்புதல்களும் பெற்ற பிறகே கருணாநிதி நினைவிடத்தில் பேனா நினைவு சின்னம் அமைப்பதற்கான பணிகள் தொடங்கப்படும்" என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.


Next Story