அரசு பஸ் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த வேன்


அரசு பஸ் மீது மோதி தலைகுப்புற கவிழ்ந்த வேன்
x
தினத்தந்தி 15 Sep 2023 11:45 PM GMT (Updated: 15 Sep 2023 11:46 PM GMT)

பட்டிவீரன்பட்டி அருகே அரசு பஸ் மீது வேன் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது. இதில் தொழிலாளர்கள் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

திண்டுக்கல்

அரசு பஸ்- வேன் மோதல்

பட்டிவீரன்பட்டி அருகே உள்ள ஒட்டுப்பட்டியில் தனியார் மில் உள்ளது. இதில் வேலை செய்யும் பெண் தொழிலாளர்கள் பணி முடிந்து ஒரு வேனில் வீட்டுக்கு நேற்று சென்று கொண்டிருந்தனர். வேனை வத்தலக்குண்டுவை சேர்ந்த ரமேஷ் (வயது 37) என்பவர் ஓட்டினார். திண்டுக்கல்-வத்தலக்குண்டு தேசிய நெடுஞ்சாலையில் முத்துலாபுரம் பிரிவு அருகே உள்ள மருதாநதி பாலத்தில் வந்தபோது நாய் ஒன்று திடீரென்று குறுக்கே புகுந்தது.

அந்த நாய் மீது மோதாமல் இருக்க டிரைவர் வேனை திருப்பினார். அதற்குள் நாய் மீது வேன் மோதியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த வேன் எதிரே வத்தலக்குண்டுவில் இருந்து திண்டுக்கல் நோக்கி வந்த அரசு பஸ் மீது மோதியது. பின்னர் மோதிய வேகத்தில் பாலத்தின் தடுப்பு சுவரில் மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.

10 பேர் படுகாயம்

இந்த விபத்தில் ரமேஷ் மற்றும் வேனில் பயணம் செய்த வத்தலக்குண்டு அருகே உள்ள உச்சப்பட்டியை சேர்ந்த ராமுத்தாய் (வயது 48), திவ்யா (29), மகேஸ்வரி (40), கருப்பாயி (45), மாயக்காள் (43), சின்னுபட்டியை சேர்ந்த மரிய கமலா (53), சமத்துவபுரத்தை சேர்ந்த மலர்கொடி (54) உள்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர். பஸ்சில் இருந்த பயணிகள் காயமின்றி உயிர் தப்பினர்.

இதுகுறித்து பட்டிவீரன்பட்டி போலீஸ் மற்றும் வத்தலக்குண்டு தீயனைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் அவர்களை மீட்டு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். விபத்து குறித்து வத்தலக்குண்டு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story