போலீஸ்காரர் வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சம் துணிகர கொள்ளை


போலீஸ்காரர் வீட்டில் புகுந்து ரூ.1½ லட்சம் துணிகர கொள்ளை
x
தினத்தந்தி 29 Jun 2023 6:45 PM GMT (Updated: 30 Jun 2023 8:48 AM GMT)

பனவடலிசத்திரம் அருகே பட்டப்பகலில் போலீஸ்காரர் வீட்டின் சுவரில் துளையிட்டு புகுந்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

தென்காசி

பனவடலிசத்திரம்:

பனவடலிசத்திரம் அருகே பட்டப்பகலில் போலீஸ்காரர் வீட்டின் சுவரில் துளையிட்டு புகுந்து ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

போலீஸ்காரர்

பனவடலிசத்திரம் அருகே தேவர்குளத்தை அடுத்த வெள்ளப்பனேரி பஞ்சாயத்து வடக்கு பூலாங்குளம் கிராமத்தைச் சேர்ந்தவர் முத்துபாண்டி (வயது 52), விவசாயி. இவருடைய மனைவி முத்தமிழ் செல்வி. இவர்களுக்கு கங்கைதாஸ் என்ற மகனும், பெர்த்தி என்ற மகளும் உள்ளனர். இவர்கள் இருவரும் போலீஸ்காரர்களாக பணியாற்றி வருகின்றனர்.

கங்கைதாஸ், சென்னையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவருக்கு திருமண ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. திருமண செலவுக்காக முத்துபாண்டி தனது வீட்டில் பீரோவில் ரூ.1½ லட்சத்தை வைத்து இருந்தார்.

சுவரில் துளையிட்டு கொள்ளை

நேற்று முன்தினம் காலையில் முத்துபாண்டி தனது மகனுக்கு பெண் பார்ப்பதற்காக குடும்பத்தினருடன் நெல்லைக்கு சென்றார். இவரது வீட்டில் ஆட்கள் இல்லாததை நோட்டமிட்ட மர்மநபர்கள் அங்கு கொள்ளையடிக்க திட்டமிட்டனர். அதன்படி, முத்துபாண்டியின் வீட்டின் பின்பக்க சுவரில் துளையிட்டு, அதன் வழியாக மர்மநபர்கள் உள்ளே நுழைந்தனர். பின்னர் அங்கிருந்த பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த ரூ.1½ லட்சத்தை கொள்ளையடித்து சென்றனர்.

மாலையில் முத்துபாண்டியன் குடும்பத்தினர் தங்களது வீட்டுக்கு திரும்பி வந்தபோது, பின்பக்க சுவரில் துளையிடப்பட்டு ரூ.1½ லட்சம் கொள்ளையடிக்கப்பட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தனர்.

கொள்ளையர்களுக்கு வலைவீச்சு

இதுகுறித்து தேவர்குளம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். கொள்ளை நடந்த வீட்டில் பதிவான தடயங்களை ைகரேகை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

போலீசார் 2 தனிப்படைகளை அமைத்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வருகின்றனர். நெல்லை அருகே பட்டப்பகலில் போலீஸ்காரரின் வீட்டின் சுவரில் துளையிட்டு ரூ.1½ லட்சத்தை மர்மநபர்கள் துணிகரமாக கொள்ளையடித்து சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story