விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படும்


விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படும்
x

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

தஞ்சாவூர்

தஞ்சாவூர்:

தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே விரைவில் ஆம்னி பஸ் நிலையம் செயல்படும் என்று மேயர் சண்.ராமநாதன் கூறினார்.

புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு

தஞ்சை மாநகராட்சி பகுதியில் மேயர் சண்.ராமநாதன் ஒவ்வொரு வார்டாக சென்று நம்ம வார்டு, நம்ம மேயர் என்ற திட்டத்தின் கீழ் ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நேற்று 51-வது வார்டில் உள்ள புதிய பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்டார்.

புதிய பஸ் நிலையத்தில் சாக்கடை நீர் தேங்கும் இடம் மற்றும் மழைநீர் வடிகால் வசதி மேற்கொள்ளும் இடம், புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் உள்ள பூங்காக்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஆய்வு மேற்கொண்டார்.

ஆம்னி பஸ்நிலையம்

பின்னர் மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், "தஞ்சை புதிய பஸ் நிலையம் தனித்துவம் வாய்ந்த வகையில் புதுப்பொலிவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும். புதிய பஸ் நிலையத்தில் மழைநீர் தேங்காத வகையில் வடிகால் வசதிகள் மேற்கொள்ளப்படும். புதிய பஸ் நிலையத்தின் பின்பகுதியில் உள்ள மாநகராட்சி திடலில் அருங்காட்சியகம் கட்டப்பட்டு வருகிறது.

தற்போது ராசா மிராசுதார் ஆஸ்பத்திரி சாலையில் ஆம்னி பஸ்கள் நிறுத்தப்பட்டு வருகின்றன. எனவே ஆம்னி பஸ்களுக்கு என்று தனியாக பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் அருகே அமைக்கப்பட்டு வருகிறது.

குடிநீர் தொட்டி

புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு உள்ளிட்ட 51-வது வார்டில் உள்ள பூங்காக்கள் புனரமைக்கப்படும். புதிதாக 2½ லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர் தொட்டி அமைக்கப்படும். புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பில் பழுதடைந்த நிலையில் உள்ள குடிநீர் தொட்டி அகற்றப்பட்டு அங்கு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்கப்படும்.

சரபோஜி கல்லூரி எதிரே பூங்கா அருகில் உள்ள கட்டிடம் தூய்மை பணியாளர்களுக்கான கட்டிடமாகவும், வரி வசூல் செய்யும் கட்டிடமாகவும் மாற்றம் செய்யப்படும்" என்றார்.

ஆய்வின்போது மாநகராட்சி துணை மேயர் அஞ்சுகம் பூபதி, மாநகராட்சி உதவி செயற்பொறியாளர் ரமேஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.


Next Story