மகள் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சோகம்


மகள் இறந்த துக்கம் தாங்காமல் தாயும் தற்கொலை செய்து கொண்ட சோகம்
x

கோப்புப்படம் 

திருவொற்றியூரில் மகள் இறந்த துக்கத்தில் தாயும் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

திருவொற்றியூர்,

திருவொற்றியூர் காலடிப்பேட்டை அய்யாப்பிள்ளை தோட்டத்தைச் சேர்ந்தவர் குணசேகரன் (42 வயது). கட்டிடத் தொழிலாளி. இவரது மனைவி சுதா (38 வயது). வீட்டு வேலைகள் பார்த்து வந்தார். இவர்களது மகள் ராகவி (17 வயது). அதே பகுதியில் உள்ள பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வந்தார்.

இவர் வாலிபர் ஒருவரை காதலித்து வந்ததாகவும், இதையறிந்த பெற்றோர் மகளை கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் விரக்தி அடைந்த மாணவி ராகவி, கடந்த 15-ம் தேதி காதலனுடன் செல்போனில் பேசிவிட்டு அறைக்குள் சென்று தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த நிலையில் சுதா, மகள் இறந்த துக்கம் தாங்காமல் சோகத்தில் இருந்து வந்தார். அவருக்கு உறவினர்கள் ஆறுதல் கூறினர். ஆனாலும் மிகுந்த மன உளைச்சலில் இருந்த சுதா, நேற்று காலை வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது பற்றி திருவொற்றியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story