வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது


வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவானது
x
தினத்தந்தி 22 May 2024 4:23 AM GMT (Updated: 22 May 2024 4:53 AM GMT)

தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் முதல் கோடை வெயில் சுட்டெரித்து வந்தது. இதற்கிடையே கடந்த 4-ந் தேதி 'அக்னி நட்சத்திரம்' எனப்படும் கத்திரி வெயிலும் தொடங்கியது. கத்திரி வெயில் தொடங்கிய பின்னர் வெயில் தாக்கம் அதிகரித்தது.

இதற்கிடையே கடந்த சில நாட்களாக தமிழக உள் மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், கடலோர மாவட்டங்களில் அனேக இடங்களிலும் மிதமானது முதல் கனமழை பெய்து வருகிறது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் மழை பெய்தது. இதையடுத்து வங்கக்கடலில் இன்று காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது.

அதன்படி, தென்மேற்கு மற்றும் மத்திய மேற்கு வங்கக் கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி வடகிழக்கு திசையில் நகர்ந்து, வரும் 24-ந் தேதி காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவக்கூடும். அதன் பிறகு, இது மேலும் வலுப்பெற்று வடகிழக்கு திசையில் நகரக்கூடும் எனவும் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் முதல் காற்றழுத்த தாழ்வுப்பகுதி இதுவாகும். இதனால் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இன்றும் நாளையும் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


Next Story