காலை உணவுத்திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த கலெக்டர்


காலை உணவுத்திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்த கலெக்டர்
x

பறக்கை அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அங்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

பறக்கை அரசு பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் அங்கு வழங்கப்படும் காலை உணவுத்திட்டம் குறித்து மாணவர்களிடம் கேட்டறிந்தார்.

காலை உணவுத்திட்டம்

குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அரசு பள்ளிகளில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ-மாணவிகளுக்கு முதல்-அமைச்சரின் காலை உணவு வழங்கும் திட்டம் கடந்த சில நாட்களுக்கு முன்பு விரிவுபடுத்தப்பட்டது.

இந்தநிலையில் குமரி மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் நேற்று பறக்கை அரசு நடுநிலைப்பள்ளியில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் 1 முதல் 5-ம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளின் நலனை கருத்தில் கொண்டு அனைத்து மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளிகளில் பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு வழங்கும் திட்டத்தினை நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை அரசு தொடக்கப்பள்ளியில் தொடங்கி வைத்தார். இதன்மூலம் தமிழகத்தில் ஊரக பகுதிகளை சேர்ந்த 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் பயிலும் சுமார் 17 லட்சம் மாணவ-மாணவிகள் பயன்பெறுகிறார்கள்.

நோக்கம்

இந்த திட்டத்திற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் முக்கிய நோக்கம் மாணவ-மாணவிகளின் கற்றல் திறனை மேம்படுத்துவதேயாகும். ஆரோக்கியமான வருங்கால சந்ததியினரை உருவாக்கிடவும், குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டை நீக்கி அரசு பள்ளிகளில் மாணவ-மாணவிகளின் வருகையை அதிகப்படுத்துவதை உறுதி செய்வது ஆகும்.

மேலும், காலை உணவு திட்டத்தின் வாயிலாக குழந்தைகளுக்கு பள்ளி வேலை நாட்களில் சேமியா, வெண்பொங்கல், ரவை, கோதுமை ரவை உள்ளிட்ட சத்தான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. உணவு வழங்குவதில் குறைபாடுகள் இருப்பதை கண்டறியப்பட்டால் உடனடியாக நிவர்த்தி செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இவ்வாறு கலெக்டர் ஸ்ரீதர் கூறினார்.

அதைத்தொடர்ந்து அவர் பள்ளி மாணவர்களிடம் காலை உணவு வழங்குவது குறித்து கேட்டறிந்தார். இந்த ஆய்வின்போது திட்ட இயக்குனர் (மகளிர் திட்டம்) பீபீ ஜாண், துறை சார்ந்த அதிகாரிகள், பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story