ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்


ஓ.பன்னீர்செல்வம் தரப்பு மேல்முறையீட்டு மனுவை இன்று விசாரிக்கிறது சென்னை ஐகோர்ட்
x

தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

சென்னை,

அ.தி.மு.க., பொதுக்குழுவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை எதிர்த்தும், அ.தி.மு.க., பொதுச்செயலாளர் தேர்தலுக்கு தடை கோரியும் சென்னை ஐகோர்ட்டில் ஓ.பன்னீர்செல்வம், மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தனித்தனியாக வழக்கு தொடர்ந்தனர்.

இந்த வழக்குகளில், இடைக்கால மனுக்களை விசாரித்த நீதிபதி கே.குமரேஷ்பாபு, பொதுக்குழு தீர்மானங்கள் செல்லும் என்று நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தார். மேலும் பொதுச்செயலாளர் பதவிக்கு தடை கேட்ட மனுவையும் நிராகரித்தார். இதனையடுத்து எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளர் ஆனார்.இதற்கிடையே தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் உடனடியாக மேல்முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் ஆர்.மகாதேவன், முகமது ஷபீக் ஆகியோர் கொண்ட பெஞ்சில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவின் சான்றளிக்கப்பட்ட நகல் இல்லாமல் இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது.அந்த கோரிக்கையை நீதிபதிகள் ஏற்றனர். அப்போது மனோஜ்பாண்டியன், வைத்திலிங்கம், ஜே.சி.டி.பிரபாகர் ஆகியோர் தரப்பில் தாங்களும் மேல்முறையீடு செய்து இருப்பதாகவும், ஆனால் தங்களது மனுக்கள் பட்டியலிடப்படவில்லை என்பதால் ஓ.பன்னீர்செல்வம் வழக்குடன் தங்களது வழக்கையும் சேர்த்து பிற்பகலில் விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், அனைத்து மேல்முறையீட்டு மனுக்களும் இன்று (வியாழக்கிழமை) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என்று உத்தரவிட்டனர்.


Next Story