சவாரி வந்த இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை: ஆட்டோ டிரைவருக்கு போலீஸ் வலைவீச்சு


இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை
x
தினத்தந்தி 20 May 2024 3:22 PM GMT (Updated: 20 May 2024 3:29 PM GMT)

வீட்டிற்கு அழைத்து சென்ற ஆட்டோ டிரைவர் சுகுமார் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

சென்னை,

கர்நாடக மாநிலத்தில் இருந்து 25 வயது மதிக்கதக்க இளம்பெண் சென்னையில் வேலை தேடி கடந்த 18-ம் தேதி இரவு ரெயில் மூலம் சென்ட்ரல் ரெயில் நிலையத்தில் இறங்கினார். பின்னர் அவர் அருகில் உள்ள பெண்கள் விடுதியில் தங்குவதற்கு உதவி செய்யுமாறு அங்குள்ள ஆட்டோ டிரைவர்களிடம் கேட்டார். அப்போது அங்கிருந்த ஆட்டோ டிரைவர் சுகுமார் இளம்பெண்ணை அருகில் உள்ள பெண்கள் விடுதியை காண்பிப்பதாக கூறி அழைத்து சென்று சென்ட்ரல் அருகே உள்ள விடுதியை காண்பித்துள்ளார்.

அந்த விடுதி பிடிக்காததால் இளம்பெண் வேறு சில விடுதியை காண்பிக்குமாறு கேட்டுள்ளார். இதனை சாதகமாக பயன்படுத்திய டிரைவர் சுகுமார் சவாரி வந்த இளம்பெண்ணிடம் நைசாக பேச்சுக்கொடுத்து கொளத்தூர் லட்சுமிபுரம் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்கு அழைத்து சென்றார். அங்கு சென்றதும் ஆட்டோ டிரைவர் சுகுமார் திடீரென இளம்பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த இளம்பெண் வீட்டில் இருந்து கூச்சலிட்டபடி வெளியே ஓடிவந்தார். இதனை கண்ட அப்பகுதி மக்கள் போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே வீட்டில் இருந்து ஆட்டோ டிரைவர் சுகுமார் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். இன்ஸ்பெக்டர் கலைச்செல்வி மற்றும் போலீசார் விரைந்து வந்து இளம்பெண்ணை மீட்டு விசாரித்தனர். பின்னர் அவரை கர்நாடகா மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். மேலும் தலைமறைவாக உள்ள ஆட்டோ டிரைவர் சுகுமாரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.


Next Story