தென்காசி: அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்ப தேரோட்டத்தின் போது அலங்கார பந்தலில் பட்டாசு வெடித்து தீ விபத்து - வீடியோ


x

தென்காசி அருகே அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் தெப்ப தேரோட்டத்தின் போது அலங்கார பந்தலில் பட்டாசு வெடித்து தீ விபத்து ஏற்பட்டது.

சிவகிரி,

தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா வாசுதேவநல்லூரில் உள்ள அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேரோட்டம் நடைபெறும். கொரோனா காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெறவில்லை. இந்நிலையில் இந்த ஆண்டு ஆனித் திருவிழா கடந்த 3 -ந் தேதியன்று கொடியேற்றத்துடன் துவங்கியது. 10 -ஆம் நாள் திருவிழாவின் போது அர்த்தநாரீஸ்வரர் எழுந்தருளிய தெப்ப தேரோட்டம் நடைபெற இருந்தது. தெப்ப தேரோட்டத்தை காண சுமார் 2 ஆயிரம் பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

விழாவையொட்டி சுமார் 9.30 மணியளவில் கோவில் தென்புறத்தில் பட்டாசு வெடித்த போது அதிலிருந்து தீப்பொறி கோவில் முன்பு போடப்பட்டிருந்த கூரைப்பந்தலில் திடீரென்று விழுந்தது. இதனால் தீ மளமளவென எரிந்தது. அலங்கார பந்தல் முற்றிலும் எறிந்து நாசமானது.

இதைப்பார்த்ததும் தெப்பத்திருவிழாவை காண கூடியிருந்த பக்தர்கள் மற்றும் பெண்கள் கைக்குழந்தையுடன் நாலாபுறமும் சிதறி ஓடினர்.

அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த வாசுதேவநல்லூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து உடனடியாக தீயை அணைத்தனர். இதனால் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தீயணைப்பு துறையினர் துரிதமாக செயல்பட்டு தீயை அணைத்ததால் பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.

மேலும், இந்த தீ விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story