தொழில் நுட்ப கோளாறால் 2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடிக்கும் திருச்சி-சார்ஜா விமானம்; பயணிகள் தவிப்பு


தொழில் நுட்ப கோளாறால் 2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடிக்கும் திருச்சி-சார்ஜா விமானம்; பயணிகள் தவிப்பு
x
தினத்தந்தி 11 Oct 2024 1:56 PM GMT (Updated: 11 Oct 2024 2:27 PM GMT)

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட விமானம் தொழில்நுட்ப கோளாறால், தரையிறங்க முடியாமல் 2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருக்கிறது.

திருச்சி,

திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஏர் இந்தியா விமானம் ஒன்று 141 பயணிகளை ஏற்றிக்கொண்டு இன்று மாலை 5.40 மணிக்கு புறப்பட்டது. விமானம் மேலே எழும்பியதும் அதன் சக்கரங்கள் உள்ளே சென்று விடும். ஆனால், இந்த விமானத்தின் சக்கரங்கள் உள்ளே செல்லவில்லை. இதனால், அதனை மீண்டும் திருச்சி விமான நிலையத்தில் தரையிறக்குவது என முடிவு செய்யப்பட்டது.

இதனால், விமானம் 2 மணிநேரம் வானத்திலேயே வட்டமடித்து கொண்டு இருக்கிறது. விமானத்தின் எரிபொருள் தீரும் வரை வானில் வட்டமடித்து விட்டு அதன்பின்னர், தரையிறக்கலாம் என்று முடிவு செய்யப்பட்டு உள்ளது. ஒருபுறம் சக்கரங்களை இயக்கவும் முயற்சி நடந்து வருகிறது.

இதனை தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கைக்காக, 10-க்கும் மேற்பட்ட ஆம்புலன்ஸ் வாகனங்கள், 4 தீயணைப்பு வாகனங்களும் திருச்சி விமான நிலையத்தில் தயார் நிலையில் உள்ளன. இதனால், விமானத்தில் 2 மணிநேரத்திற்கும் மேலாக பயணிகள் தவித்து வருகின்றனர்.


Next Story