டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சென்னை வாலிபர் உள்பட 2 பேர் பலி


டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதல்: சென்னை வாலிபர் உள்பட 2 பேர் பலி
x

திசையன்விளை அருகே டேங்கர் லாரி-மோட்டார் சைக்கிள் மோதிக் கொண்ட விபத்தில் சென்னை வாலிபர் உள்பட 2 பேர் பரிதாபமாக இறந்தனர்.

நெல்லை,

தென்காசி மாவட்டம் ஆலங்குளத்தை அடுத்த கழுநீர்குளம் ஊரைச் சேர்ந்தவர் வரதராஜன் (வயது 27), எலக்ட்ரீசியன். சென்னை காசிமேடு பகுதியை சேர்ந்தவர் சாம்ராஜ் (35). இவர்கள் இருவரும் நெல்லை மாவட்டம் திசையன்விளை அருகே உள்ள திருமண அழைப்பிதழ் அச்சடிக்கும் அச்சகத்தில் தங்கி வேலை பார்த்து வந்தனர். இருவருக்கும் திருமணம் ஆகவில்லை.

நேற்று முன்தினம் இரவு அவர்கள் இருவரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திசையன்விளையில் இருந்து வேலை செய்யும் அச்சகத்துக்கு சென்றனர். மோட்டார் சைக்கிளை சாம்ராஜ் ஓட்டினார்.

பரிதாப சாவு

திசையன்விளையை அடுத்த குமாரபுரம் அருகே சென்றபோது அவர்களது மோட்டார் சைக்கிளும், அந்த வழியாக வந்த பெட்ரோல் டேங்கர் லாரியும் எதிர்பாராதவிதமாக மோதிக் கொண்டன. இதில் அவர்கள் இருவரும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர். இதில் சாம்ராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். படுகாயம் அடைந்த வரதராஜனை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் இறந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்ததும் போலீசார் இருவரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.


Next Story