அ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு


அ.தி.மு.க.வை அண்ணாமலை விமர்சித்த நிலையில் வேலுமணி கருத்துக்கு தமிழிசை ஆதரவு
x

அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

சென்னை,

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்திருந்தால் 30-35 தொகுதிகள் வரை வென்றிருப்போம். தமிழிசை, எல்.முருகன் இருந்தபோது அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி நன்றாகத்தான் இருந்தது; கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை. அண்ணாமலை பா.ஜ.க. மாநில தலைவரான பிறகுதான், பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணியில் பிளவு ஏற்பட்டது. அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலைதான் காரணம்" என்று கூறியிருந்தார்.

இதையடுத்து தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது, "2019-ல் ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணியில் இருந்த போது, அ.தி.மு.க. படுதோல்வி அடைந்தது. இந்த நிலையில் கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் என்பது போல, 2024 தேர்தலில் பா.ஜ.க. கூட்டணியில் இருந்திருந்தால் 30 முதல் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எஸ்.பி.வேலுமணி கூறியிருக்கிறார்.

தனியாக இருந்தே அ.தி.மு.க. ஒரு சீட்டு கூட பெறவில்லை. அப்படியிருக்கும்போது ஒன்றாக இருந்திருந்தால் 35 சீட்டுகள் கிடைத்திருக்கும் என்று எப்படி அவர் சொல்கிறார்? எஸ்.பி.வேலுமணி கூறியதை பார்க்கும்போது, எடப்பாடி பழனிசாமிக்கும், எஸ்.பி. வேலுமணிக்கும் இடையே உட்கட்சி பிரச்சினை இருப்பது போல் தெரிகிறது. அ.தி.மு.க. தலைவர்களை தமிழக மக்கள் நிராகரித்து விட்டனர் என்பது தான் தேர்தல் தரும் பாடம்" என்று விமர்சித்திருந்தார்.

இந்த நிலையில் எஸ்.பி.வேலுமணியின் கருத்துக்கு தமிழக முன்னாள் பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆதரவு தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர் கூறியதாவது:-

அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி அமைத்திருந்தால் எஸ்.பி.வேலுமணி கூறியதுபோல் 35 இடங்கள் கிடைத்திருக்கும் என்பது யதார்த்தமான உண்மை. அ.தி.மு.க.வோடு பா.ஜ.க. கூட்டணி வைத்திருந்தால், தி.மு.க.விற்கு இத்தனை இடங்கள் கிடைத்திருக்காது. கூட்டணி என்பது ஒரு அரசியல் வியூகம். 2026-ல் என்ன கூட்டணி என்பதை இப்போது என்னால் கூற முடியாது.

அ.தி.மு.க.வுடன் கூட்டணி இல்லை என்று யாருமே எங்களது கட்சியில் சொல்ல முடியாது. தேர்தல் கூட்டணி குறித்து தேசிய தலைமைதான் முடிவு செய்யும். அ.தி.மு.க. குறித்த அண்ணாமலையின் கருத்துக்கு அவரிடமே விளக்கம் பெறுங்கள். அ.தி.மு.க. உட்கட்சி விவகாரத்தில் நான் எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.


Next Story