நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்


நாட்டிலேயே 2-வது பெரிய பொருளாதார மாநிலம் தமிழ்நாடு: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
x

தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

காஞ்சிபுரம்,

காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் கிராமத்தில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்களுக்கான குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. 18 ஆயிரத்து 720 பெண் பணியாளர்கள் பயன்பெறும் வகையில் ரூ.706.50 கோடி மதிப்பீட்டில் இந்த குடியிருப்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் இதற்கான திறப்பு விழா இன்று மாலை நடைபெற்றது. இதில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு குடியிருப்பு வளாகத்தை திறந்து வைத்து பெண் பணியாளர்களுக்கு சாவிகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் பாக்ஸ்கான் நிறுவனத்தின் தலைவர் யாங் லீயு, தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் என பலரும் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் பேசிய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், "இந்தியாவிலேயே 2வது பெரிய பொருளாதார மாநிலம் என்ற இடத்தை தமிழ்நாடு தக்கவைத்துள்ளது. தொழில் வளர்ச்சியில் தெற்காசியாவிலேயே தமிழ்நாட்டை முதல் மாநிலமாக கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் 39 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிற்சாலைகள் உள்ளன. தொழில் வளர்ச்சியில்தான் பொருளாதாரம் முன்னேறும் என்பதால் அதில் தனி கவனம் செலுத்தப்படுகிறது.

2030ம் ஆண்டுக்குள் ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரம் கொண்ட மாநிலமாக தமிழ்நாடு வளர்ச்சி அடைய வேண்டும் என ஒரு லட்சிய இலக்கை நிர்ணயித்துள்ளேன். நிதி ஆயோக் அமைப்பின் 2023 – 24ம் ஆண்டுக்கான அறிக்கையின்படி வறுமை ஒழிப்பு, சுற்றுச்சூழல் பராமரிப்பு, குறைந்த செலவில் மாசில்லா எரிசக்தி ஆகிய குறியீடுகளில் தமிழ்நாடு இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளது.

தொழிற்துறைக்கு சாதகமான எல்லா அம்சங்களும் ஒருங்கமையப் பெற்ற மாநிலமாக தமிழ்நாடு விளங்குகிறது. பிற மாநிலங்களுக்கு முன்னோடியாக, சிப்காட் மெகா தொழிற்சாலை பணியாளர்கள் குடியிருப்பு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலேயே பெண் பணியாளர்களின் எண்ணிக்கை தமிழ்நாட்டில்தான் அதிகம். பாக்ஸ்கான் நிறுவனத்தில் பணியாற்றும் 41 ஆயிரம் பணியாளர்களில் 35 ஆயிரம் பேர் பெண்கள்" என்று அவர் கூறினார்.


Next Story