மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி


மெரினாவில் உள்ள காந்தி சிலையை இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி
x

மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்டப் பணிகளுக்காக, சென்னை மெரினா கடற்கரையில் அமைந்துள்ள மகாத்மா காந்தி சிலையை 15 மீட்டர் தொலைவில் இடமாற்றம் செய்ய தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது.

சென்னை,

சென்னை மெட்ரோ ரெயில் திட்டத்தின் 2ஆம் கட்ட பணிகளுக்காக காந்தி சிலையை இடமாற்றம் செய்ய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. இதையடுத்து, தமிழக அரசிடம் மெட்ரோ ரெயில் நிர்வாகம் அனுமதி கோரியிருந்தது. தமிழக அரசு இன்று ஒப்புதல் அளித்திருப்பதை அடுத்து, இந்த மாத இறுதிக்குள் காந்தி சிலையை இடமாற்றம் செய்ய மெட்ரோ நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

தற்போது காந்தி சிலை அமைந்திருக்கும் பகுதியில் தான், இரண்டாம் கட்ட மெட்ரோ ரெயில் திட்டத்தின் 90 சதவீத பணிகள் நடைபெறவிருக்கிறது. இந்தப் பணிகள் நிறைவடைந்ததும் காந்தி சிலை மீண்டும் பழைய இடத்தில் வைக்கப்படும்.

சிலை மீண்டும் பழைய இடத்துக்கு மாற்றப்படும் வரை காந்தி சிலையை மக்கள் பார்வையிடவோ, மாலை அணிவித்து மரியாதை செலுத்துவதோ இயலாது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மெட்ரோ ரெயில் திட்டப் பணிகளுக்காக ராட்சத இயந்திரங்களை பயன்படுத்தும் போது சிலைக்கு ஏதேனும் சேதாரம் ஆகக் கூடாது என்பதற்காகவே காந்தி சிலை 15 மீட்டர் தொலைவுக்கு இடமாற்றம் செய்யப்படுவதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.


Next Story