பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவு


பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவு
x

கோப்புப்படம் 

தினத்தந்தி 11 Sep 2023 11:41 AM GMT (Updated: 11 Sep 2023 11:46 AM GMT)

பழங்குடியினர் நலவாரியத்தில் 2 பழங்குடியின எம்.எல்.ஏக்களை உறுப்பினர்களாக சேர்த்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:-

தமிழ்நாட்டில் உள்ள பழங்குடியின மக்கள் சமூக பொருளாதார, கல்வி நிலைகளில் திட்டமிடப்பட்ட உறுதியான முன்னேற்றத்தை அடைவதற்கென தனியாக தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் அமைத்து அரசாணை (நிலை) எண். 48, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (ப.மே1) துறை, நாள் 20.04.2007-ன் படி உரிய ஆணைகள் வெளியிடப்பட்டன.

ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சரை தலைவராகக் கொண்டும் 8 அலுவல் சார்ந்த உறுப்பினர்கள், 2 பழங்குடியின சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளடக்கிய 14 அலுவல் சாரா உறுப்பினர்கள் மற்றும் 3 பழங்குடியினரல்லாத அலுவல் சாரா உறுப்பினர்கள் கொண்டு தமிழ்நாடு பழங்குடியினர் நல வாரியம் திருத்தி அமைத்து அரசாணை (நிலை) எண்.121, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (பமே1(2) துறை, நாள் 08.09.2023-இல் ஆணை வெளியிடப்பட்டுள்ளது.

மேற்கண்ட நலவாரியத்தில் பழங்குடியின மக்களை உறுப்பினர்களாக சேர்த்து அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்தவும், உதவித் தொகை வழங்குவதற்கும், பணிகள் மேற்கொள்ளப்படும் என ஆதிதிராவிடர் நலத்துறை அமைச்சர் என். கயல்விழி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



Next Story