தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்
![தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம் தமிழக மீனவர்கள் கைது: வெளியுறவுத்துறை மந்திரிக்கு அண்ணாமலை கடிதம்](https://media.dailythanthi.com/h-upload/2024/07/02/1631318-untitled-1.webp)
வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
சென்னை,
ராமேசுவரம் தனுஷ்கோடியை சேர்ந்த மீனவர்கள் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்றனர். அதன்படி கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு அருகே மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு ரோந்து வந்த இலங்கை கடற்படையினர் எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக் கூறி மீனவர்கள் 25 பேரை கைது செய்தனர். மேலும் 4 விசைப்படகுகளையும் பறிமுதல் செய்தனர்.கைது செய்யப்பட்ட 25 மீனவர்களும் காங்கேசன் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். தொடர்ந்து அவர்களிடம் அங்கு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ராமேசுவரத்தைச் சேர்ந்த 25 மீனவர்களை உடனடியாக விடுதலை செய்ய வலியுறுத்தி வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கடிதம் எழுதியுள்ளார்.
இலங்கை கடற்படையினரின் தொடர் கைது நடவடிக்கைகளில் இருந்து தமிழக மீனவர்களை காப்பாற்றி கச்சத்தீவு பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணவும், கைதிகளை முன்கூட்டியே திருப்பி அனுப்பவும், அவர்களின் மீன்பிடி படகுகளை விடுவிக்குமாறு அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார்.