தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே... அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை


தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே... அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது - ஐகோர்ட்டு மதுரைக்கிளை
x

கோப்புப்படம் 

தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று ஐகோர்ட்டு மதுரைக்கிளை நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

மதுரை,

ராமநாதபுரம் மாவட்டம் மோர்பண்ணை மீனவ கிராமத்தைச் சேர்ந்த தீரன் திருமுருகன் என்பவர் ஐகோர்ட்டு மதுரைக்கிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார். அதில், தமிழக மீனவர்களுக்கும், இலங்கை கடற்படையினருக்குமான பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூன் மாதம் 2-வது வாரத்தில் கோட்டைப்பட்டினம் பகுதியைச் சேர்ந்த 4 மீனவர்களையும், ஜூன் 23-ந்தேதி நெடுந்தீவு பகுதியைச் சேர்ந்த 22 மீனவர்களையும், ஜூலை 1-ந்தேதி ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த 25 மீனவர்களையும் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.

அவர்களின் படகுகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த பிரச்சினைகளால் தமிழக மீனவர்கள் அதிக மனஅழுத்தத்துக்கு ஆளாவதோடு, வாழ்வாதாரப் பிரச்சினைகளையும் எதிர்கொண்டு வருகின்றனர். தங்களின் வாழ்வாதாரத்திற்காக மீன்பிடிக்கும் மீனவர்களை இலங்கை கடற்படையினர் குற்றவாளிகள் போல கைது செய்வதோடு, அவர்கள் மீது கிருமிநாசினியையும் தெளித்து மனித உரிமை மீறலிலும் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 2021-ம் ஆண்டு குஜராத்தைச் சேர்ந்த மீனவர்களை பாகிஸ்தான் கடற்படையினர் தாக்கியபோது, மத்திய அரசு பாகிஸ்தான் கடற்படையினருக்கு கடும் எச்சரிக்கை விடுத்தது. ஆனால் தமிழக மீனவர்கள் விவகாரத்தில் அதுபோன்ற நடவடிக்கைகள் எதுவும் எடுக்கப்படவில்லை. ஆகவே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் தமிழக மீனவர்களை விடுவிக்க உரிய நடவடிக்கை எடுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் சுரேஷ்குமார், அருள்முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மீனவர்களை விடுவித்து தமிழகம் அழைத்து வரவும், பிரச்சினையை சரிசெய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக மீனவர்களும் இந்திய குடிமக்களே; அவர்களின் பாதுகாப்பு முக்கியமானது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

மேலும், பிரச்சினை மற்றொரு நாட்டோடு தொடர்புடையது. எனவே, மீனவர்களை மீட்க தேவையான நடவடிக்கைகளை மத்திய அரசு விரைவாக எடுக்கும் என்று கோர்ட்டு நம்புகிறது என்று தெரிவித்து வழக்கை முடித்து வைத்தனர்.


Next Story