புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்


புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்
x

புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ளலாம்

நாகப்பட்டினம்

கல்வி நிறுவனங்களில் நடக்கும் சிறப்பு முகாம்களில் கலந்துெகாண்டு புதுமைப்பெண் திட்டம் குறித்து மாணவிகள் தெரிந்து கொள்ளலாம் என கலெக்டர் அருண்தம்புராஜ் கூறினார்.

கருத்தரங்கம்

நாகை பாரதிதாசன் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப்பெண் திட்டம் குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. கருத்தரங்கிற்கு மாவட்ட கலெக்டர் அருண் தம்புராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுபாஷினி, மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லூரி முதல்வர் ராஜாராமன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் கலெக்டர் அருண் தம்புராஜ் கலந்துகொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

அரசு பள்ளிகளில் 6 முதல் 12-ம் வகுப்பு வரை படித்து மேல் படிப்பு, தொழில்நுட்ப படிப்பு பயிலும் மாணவிகளுக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் வழங்கும் புதுமைப்பெண் திட்டம் செயல்படுகிறது.

விண்ணப்பிக்கலாம்

தற்போது https://www.pudhumaipenn.tn.gov.in என்ற வலைதளத்தில் மேல்படிப்பு, தொழில்நுட்ப படிப்புகளில் முதலாம் ஆண்டு பயிலும் தகுதி வாய்ந்த மாணவிகள் விண்ணப்ப முறையினை சரியாக தெரிந்து கொண்டு விண்ணப்பிக்கலாம். மேலும் 2,3 மற்றும் 4-ம் ஆண்டுகளில் படிக்கும் மாணவிகள் முதற்கட்டத்தில் விண்ணப்பிக்க தவறியவர்கள் தற்போது விண்ணப்பிக்கலாம்.

இந்த திட்டத்தில் விண்ணப்பிக்கும் மாணவிகள் இந்தியன் வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா மற்றும் கனரா வங்கி ஆகிய வங்கிகளில் மட்டுமே சேமிப்பு வங்கி கணக்கு வைத்திருக்க வேண்டும்.

சிறப்பு முகாம்களில் தெரிந்து கொள்ளலாம்

இணையதளத்தில் விண்ணப்பிக்கும் முன்பாக வங்கி கணக்கை, ஆதார் எண் மற்றும் கைபேசி எண்ணுடன் கண்டிப்பாக இணைத்திருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் முறை மற்றும் தகுதி வரம்பு குறித்து அனைத்து கல்வி நிறுவனங்களில் வருகிற 18-ந்தேதி வரை நடக்கும் சிறப்பு முகாம்களில் தெரிந்து கொள்ளலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story