சென்னையில் சிறுமியை சுற்றி வளைத்து கடித்த தெரு நாய்கள் - வைரல் வீடியோ


சென்னையில் சிறுமியை சுற்றி வளைத்து கடித்த தெரு நாய்கள் - வைரல் வீடியோ
x

நாய்கள் கடித்ததில் சிறுமி அனிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது.

சென்னை,

சென்னை பெரம்பூர் ரமணா நகர் பகுதியை சேர்ந்தவர் அமீத் (வயது 32). இவர், பழக்கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு தாயுப் பேகம் என்ற மனைவியும், அனிஷா, தனிஷா என 2 மகள்களும் உள்ளனர். சம்பவத்தன்று மாலை தாயுப்பேகம் தனது 2 மகள்களுடன் அருகே உள்ள மசூதிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பினார்.

ரமணா நகர் பழைய குடியிருப்பு பகுதி அருகே வரும்போது முன்னால் சென்று கொண்டிருந்த அனிஷாவை, அங்கிருந்த 4 தெரு நாய்கள் விரட்டி விரட்டி கடிக்க பாய்ந்தன. இதனால் பயந்துபோன அனிஷா, அலறியபடி ஓடினாள். 4 நாய்களும் அவளை விரட்டிச்சென்று சுற்றி வளைத்து கடித்தன. அப்போது பின்னால் வந்து கொண்டிருந்த தாயுப்பேகம், இதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். கீழே கிடந்த கல்லை எடுத்து நாய்கள் மீது வீசி விரட்டி அடித்தார்.

நாய்கள் கடித்ததில் அனிஷாவின் காலில் காயம் ஏற்பட்டது. அவர் சிகிச்சைக்காக பெரியார் நகர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். சிறுமியை நாய்கள் விரட்டி விரட்டி கடிக்கும் காட்சிகள் அங்குள்ள ஒரு வீட்டில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளது. அந்த வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

சென்னையில் பல்வேறு இடங்களில் வளர்ப்பு நாய்கள், தெரு நாய்கள் சிறுமிகள், பொதுமக்களை கடித்து குதறும் சம்பவங்கள் நடைபெற்று வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


Next Story