சண்முகா நதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்


சண்முகா நதி அணையில் தண்ணீர் திறப்பு நிறுத்தம்
x
தினத்தந்தி 17 Nov 2022 7:00 PM GMT (Updated: 17 Nov 2022 7:01 PM GMT)

உத்தமபாளையம் அருகே சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.

தேனி

உத்தமபாளையம் அருகே உள்ள ராயப்பன்பட்டியில் சண்முகா நதி அணை உள்ளது. இந்த அணையின் மொத்த நீர்மட்டம் 52.5 அடி. அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால் நீர்வரத்து அதிகரித்து அணை முழு கொள்ளளவை எட்டியது. இந்த அணையின் மூலம் ராயப்பன்பட்டி, ஆைனமலையன்பட்டி, எரசக்கநாயக்கனூர், கன்னிசேர்வை பட்டி, அப்பிபட்டி, வெள்ளையம்மாள்புரம், ஓடைப்பட்டி உள்ளிட்ட பகுதியிலுள்ள 25-க்கும் மேற்பட்ட கண்மாய்கள் நிரம்பி, நிலத்தடி நீர்மட்டம் உயரும். எனவே சண்முகா நதி அணையில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்றும், திறப்பதற்கு முன் கால்வாய் சீரமைக்க வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வந்தனர். இந்த நிலையில் நேற்று சண்முகா நதி அணையில் இருந்து பாசனத்திற்கு வினாடிக்கு 14.47 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதனை மாவட்ட கலெக்டர் முரளிதரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஆர்.டி.ஓ. பால்பாண்டியன், உத்தமபாளையம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் இன்பென்ட் பனிமய ஜெப்ரின், சின்னமனூர் ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் நிவேதா அண்ணாதுரை, ராயப்பன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பால்ராஜ், மற்றும் பொதுப்பணித்துறை அதிகாரிகள், விவசாயிகள் கலந்து கொண்டனர்.

திறக்கப்பட்ட தண்ணீர் கால்வாய் வழியாக சென்றது. அப்போது கால்வாய் முழுமையாக சீரமைக்காததால் பல இடங்களில் உடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து மாலையில் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது.


Next Story