புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டிபெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு :ஏராளமான பக்தர்கள் பங்கேற்பு


தினத்தந்தி 23 Sep 2023 6:45 PM GMT (Updated: 23 Sep 2023 6:45 PM GMT)

புரட்டாசி முதல் சனிக்கிழமையையொட்டி பெருமாள் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

கள்ளக்குறிச்சி


உளுந்தூர்பேட்டை,

புண்ணியம் நிறைந்த புரட்டாசி மாதத்தில், தினமும் பெருமாளை வழிபடுவது உன்னதமானது. அதிலும், புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகள் மேலும் சிறப்பு வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி, புரட்டாசி மாதத்தின் முதல் சனிக்கிழமையான நேற்று,கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள பெருமாள் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தது.

கள்ளக்குறிச்சி

அந்த வகையில், கள்ளக்குறிச்சியில் உள்ள மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீதில்லை கோவிந்தராஜ பெருமாள் கோவிலில் புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

காலை 6 மணிக்கு தில்லை கோவிந்தராஜ பெருமாள் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து உற்சவர் தில்லை கோவிந்தராஜ பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவிக்கு அபிஷேகம் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தனர். புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமை என்பதால் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

உளுந்தூர்பேட்டை

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள பரிக்கலில் பிரசித்தி பெற்ற லட்சுமி நரசிம்மர் கோவிலில், நேற்று புரட்டாசி மாதம் முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தற்போது கோவில் கும்பாபிஷேகத்துக்கான திருப்பணிகள் நடந்து வருகிறது. எனவே கோவிலில் இடதுபுறம் உள்ள மண்டபத்தில் பக்தர்கள் தரிசனம் செய்வதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உற்சவ மூர்த்திக்கு காலை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன.

அதனை தொடர்ந்து மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு பக்தர்களுக்கு சிறப்பு அலங்காரத்தில் லட்சுமி நரசிம்மர் காட்சி தந்தார். பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.

இதேபோல உளுந்தூர்பேட்டை ஆதிகேசவ பெருமாள் கோவில், எலவனாசூர்கோட்டை ராஜா நாராயண பெருமாள் கோவில் உள்ளிட்ட பெருமாள் கோவில்களிலும் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

தியாகதுருகம்

தியாகதுருகத்தில் உள்ள பிரசித்திபெற்ற ஸ்ரீதேவி பூதேவி சமேத சீனிவாச பெருமாள் கோவிலில், புரட்டாசிமாத முதல் சனிக்கிழமையான நேற்று சாமிக்கு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதையொட்டி சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 21 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது. தொடர்ந்து மலர்களால் அலங்கரிக்கப்பட்ட பெருமாள் சாமிக்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

இதேபோல் தியாகதுருகம் அருகே தியாகை கிராமத்தில் அமைந்துள்ள கமலவல்லி சமேத கம்ப பெருமாள் கோவிலிலும் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சங்கராபுரம்

சங்கராபுரம் மணிநதிக்கரை அருகே உள்ள அலமேலு மங்கை சமேத வெங்கடேச பெருமாள் கோவிலில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. முன்னதாக வேத கோஷங்கள் முழுங்க பெருமாளுக்கு பால், தயிர், சந்தனம், பன்னீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பெருமாளுக்கு அலங்காரம் செய்யப்பட்டு, மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டு அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

இதே போன்று தேவபாண்டலம் சவுந்தரவல்லி தாயார் சமேத பார்த்தசாரதி பெருமாள் கோவில், குளத்தூர் மற்றும் தியாகராஜபுரம் லட்சுமி நாராயண பெருமாள் கோவில், காட்டுவன்னஞ்சூர் ராமபக்த ஆஞ்சநேயர் கோவில் மற்றும் சங்கராபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில்களில் புரட்டாசி முதல் சனிக்கிழமை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது.


Next Story