தாயை அரிவாளால் வெட்டிக்கொன்ற மகன் - ஈரோடு அருகே அதிர்ச்சி


Son killed mother with sickle - shock near Erode
x

நிலம் விற்ற பணத்தை வாங்கி தரக்கோரி தாயை அரிவாளால் மகன் வெட்டிக்கொன்றுள்ளார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்டம் சென்னிமலையைச் சேர்ந்தவர் துரைசாமி. விவசாயியான இவர் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவருடைய மனைவி பாப்பாத்தி (வயது 75). இவர்களுடைய மகன் பழனிசாமி (46). இவருடைய மனைவி சாவித்ரி. இவர்களுக்கு 18 வயதில் மகன் உள்ளார். கருத்து வேறுபாடு காரணமாக 15 ஆண்டுகளாக பழனிசாமியும், சாவித்ரியும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.

பழனிசாமிக்கு குடிப்பழக்கம் இருப்பதால் வேலைக்கு செல்லாமல் குடித்துவிட்டு தனது தாய் பாப்பாத்தியிடம் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது. சமீபத்தில் தங்களுக்கு சொந்தமான 1½ ஏக்கர் விவசாய நிலத்தை பாப்பாத்தியும், பழனிசாமியும் விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதற்காக முன்பணமாக ரூ.1 லட்சம் வாங்கி உள்ளனர். மீதி பணம் இன்னும் வாங்கவில்லை என கூறப்படுகிறது.

இந்த நிலையில், நேற்று மாலையில் பழனிசாமி தனது தாய் பாப்பாத்தியிடம் விவசாய நிலம் விற்ற மீதி பணத்தை வாங்கி தன்னிடம் தரும்படி கேட்டுள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. தகராறு முற்றியதில் பழனிசாமி ஆத்திரம் அடைந்து வீட்டில் இருந்த அரிவாளை எடுத்து தனது தாய் என்றும் பாராமல் பாப்பாத்தியை சரமாரியாக வெட்டினார். இதில் ரத்த வெள்ளத்தில் பாப்பாத்தி சரிந்து விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்த தகவல் கிடைத்ததும் சென்னிமலை போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பாப்பாத்தியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தாயை கொன்ற பழனிசாமியை கைது செய்தனர். மகனே தாயை கொலை செய்த சம்பவம் ஈரோடு அருகே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


Next Story