அதிவேகமாக சென்றதால் விபத்து:பஸ்சின் மேற்கூரையில் தலை மோதியதில் சங்கராபுரம் பயணி சாவு


அதிவேகமாக சென்றதால் விபத்து:பஸ்சின் மேற்கூரையில் தலை மோதியதில் சங்கராபுரம் பயணி சாவு
x
தினத்தந்தி 22 Oct 2023 6:45 PM GMT (Updated: 22 Oct 2023 6:45 PM GMT)

பஸ் அதிவேகமாக சென்றபோது, பஸ்சின் மேற்கூரையில் தலை மோதியதில் பலத்த காயமடைந்த சங்கராபுரம் பயணி பரிதாபமாக இறந்தார்.

கள்ளக்குறிச்சி


கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் பூட்டை ரோட்டை சேர்ந்தவர் முனுசாமி மகன் சுப்பிரமணியன் (வயது 55). தையல்காரர். இவர் கோழியூரில் உள்ள தனது உறவினர் வீட்டு துக்க நிகழ்வில் பங்கேற்பதற்காக, பஸ்சில் விருத்தாசலம் வந்தார். பின்னர் அங்கிருந்து தொழுதூர் செல்லும் தனியார் பஸ்சில் ஏறினார்.

அவர் பஸ்சில் பின்பக்கம் உள்ள சீட்டில் அமர்ந்து பயணம் செய்தார். கருவேப்பிலங்குறிச்சி அடுத்த சத்தியவாடி அருகே உள்ள வேகத்தடையை பஸ் கடந்து சென்றது. அப்போது, பின் சீட்டில் அமர்ந்திருந்த சுப்பிரமணியன் தூக்கி வீசப்பட்ட நிலையில் பஸ்சின் மேற்கூரையில் மோதியதில் தலைப்பகுதியில் பலமாக அடிபட்டு காயமடைந்தார். உடன் அவரை மீட்டு பெண்ணாடம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இதுகுறித்து புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story