சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு


சிறுமிக்கு பாலியல் தொல்லை; முதியவருக்கு 20 ஆண்டு ஜெயில் - சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பு
x

சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த முதியவருக்கு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து சென்னை போக்சோ கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சென்னை

சென்னை அசோக்நகர் எம்.ஜி.ஆர். நகர் பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (வயது 67). கடந்த 2019-ம் ஆண்டு இவர் அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமியிடம் நைசாக பேசி பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதை வெளியில் சொன்னால் தொலைத்து விடுவேன் என மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்து சிறுமி தனது தாயாரிடம் தெரிவித்துள்ளார். இதைத்தொடர்ந்து சிறுமியின் தாயார் அசோக்நகர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகனை கைது செய்தனர்.

இந்த வழக்கு விசாரணை சென்னை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நீதிபதி எம்.ராஜலட்சுமி முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முருகனுக்கு 20 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பு கூறினார்.

மேலும், பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்துக்கு தமிழக அரசு இழப்பீடாக ரூ.2 லட்சம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார்.

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி, காமராஜர் நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் பலராம் சிங் (வயது 69). இவர் கடந்த 2018-ம் ஆண்டு 8 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்ததாக ஆவடி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பலராம் சிங்கை கைது செய்த நிலையில், முதியவர் பலராம்சிங் மீது போக்சோ சட்டம் பாய்ந்தது. இந்த வழக்கு திருவள்ளூரில் உள்ள மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை விசாரித்த திருவள்ளூர் மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி சுபத்ராதேவி நேற்று தீர்ப்பு வழங்கினார். அந்த தீர்ப்பில் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பலராம் சிங்குக்கு 16 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், ரூ.4 ஆயிரத்து 500 அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். இதைத்தொடர்ந்து ஆவடி அனைத்து மகளிர் போலீசார் பலராம் சிங்கை சென்னை புழல் சிறையில் அடைத்தனர்.


Next Story