அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு


அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைப்பு
x

அமைச்சர் பொன்முடி மீதான செம்மண் குவாரி வழக்கு விசாரணை 2-ந் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்டம் வானூர் தாலுகா பூத்துறை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் அளவுக்கு அதிகமாக அதாவது அனுமதியை மீறி 2 லட்சத்து 64 ஆயிரத்து 644 லோடு லாரிகளில் செம்மண் எடுத்ததன் மூலமாக அரசுக்கு 28 கோடியே 36 லட்சத்து 40 ஆயிரத்து 600 ரூபாய் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாக அமைச்சர் பொன்முடி, அவரது மகன் கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமார், ஜெயச்சந்திரன், கோபிநாதன், லோகநாதன் ஆகிய 8 பேர் மீது கடந்த 2012-ம் ஆண்டில் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

இவ்வழக்கு விசாரணை, விழுப்புரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இவ்வழக்கில் 67 பேர் அரசு தரப்பு சாட்சிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். இவர்களில் இதுவரை 51 பேர் சாட்சியம் அளித்துள்ள நிலையில் 30 பேர் அரசு தரப்புக்கு பாதகமாக பிறழ் சாட்சியம் அளித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது ஜெயச்சந்திரன், சதானந்தம், கோபிநாதன், கோதகுமார் ஆகிய 4 பேர் நேரில் ஆஜராகினர். அமைச்சர் பொன்முடி, பொன்.கவுதமசிகாமணி, ராஜமகேந்திரன் ஆகிய 3 பேரும் ஆஜராகவில்லை. அவர்கள் ஆஜர் ஆகாததற்கான காரணம் குறித்து திமுக வக்கீல்கள் மனுதாக்கல் செய்தனர். மேலும், இவ்வழக்கில் கூடுதலாக சாட்சிகளை சேர்த்து விசாரிக்க அனுமதி கேட்டு ஏற்கனவே அரசு தரப்பில் மனுதாக்கல் செய்திருந்த நிலையில் அம்மனுவும் விசாரணைக்கு வந்தது.

இதையடுத்து இருதரப்பு வாதங்களையும் கேட்டறிந்த மாவட்ட நீதிபதி பூர்ணிமா, இம்மனு மீதான உத்தரவுக்காக இவ்வழக்கு விசாரணையை வருகிற 2-ந் தேதிக்கு (திங்கட்கிழமை) ஒத்திவைத்து உத்தரவிட்டார்.


Next Story