பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல் சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு


பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல் சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை - எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
x

கோப்புப்படம்

போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க வேண்டும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

சென்னை, நங்கநல்லூர் அரசு மேல்நிலைப் பள்ளியில், ஒரு மாணவனின் நடவடிக்கைகளில் சந்தேகம் அடைந்த ஆசிரியர் அம்மாணவனது புத்தகப் பையை சோதனையிட்டபோது, அப்பையில் கஞ்சா பொட்டலங்ககள் இருப்பதை கண்டறிந்து காவல்துறைக்கு புகார் செய்ததாகவும், மாணவன் அந்த கஞ்சா பொட்டலங்களை மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பழவந்தாங்கல் ரெயில்வே நிலையத்தில் வாங்கியதாகவும் இன்றைய நாளிதழ்களில் வந்த செய்திகள் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழகம் போதைப்பொருள் கேந்திரமாக மாறிவருவதையும், குறிப்பாக பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் பொதுமக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதிகளில், பெட்டிக்கடைகளில் மிட்டாய் விற்பதுபோல், சர்வசுதந்திரமாக போதைப்பொருள்கள் விற்பனை நடைபெற்று வருவதை பத்திரிக்கை மற்றும் ஊடகங்களில் வந்த செய்திகளை சுட்டிக்காட்டி நான் பலமுறை சட்டமன்றத்திலும், பேட்டிகள் வாயிலாகவும் தி.மு.க. அரசை எச்சரித்துள்ளேன்.

நமது அடுத்த தலைமுறையை பாழாக்கும் போதைப்பொருள் விற்பனையை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டிய தமிழக காவல்துறையை, எதிர்கட்சியினரை மட்டும் பழிவாங்கும் ஏவல்துறையாக பயன்படுத்தும் தி.மு.க.வின் பொம்மை முதல்-அமைச்சருக்கு எனது கடும் கண்டனத்தை தெரிவித்துக்கொள்கிறேன்.

எதிர்கால இளம் சந்ததியினரை போதைப்பொருள் புழக்கத்திலிருந்து காப்பாற்ற, வளமான தமிழகத்தை உறுதிப்படுத்த இனியாவது போதைப்பொருள் விற்பனையை முழுமையாக கட்டுப்படுத்த காவல்துறையினருக்கு முழு சுதந்திரம் அளிக்க இந்த அரசை வலியுறுத்துகிறேன். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.


Next Story