அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்


அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள்
x
தினத்தந்தி 1 Nov 2022 6:45 PM GMT (Updated: 1 Nov 2022 6:46 PM GMT)

விழுப்புரம் அருகே அரசு பஸ்சில் ஆபத்தான பயணம் மேற்கொண்ட பள்ளி மாணவர்கள் சமூகவலைத்தளங்களில் வீடியோ வைரலானதால் பரபரப்பு

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் அருகே பில்லூர், குச்சிப்பாளையம், கோலியனூர், பஞ்சமாதேவி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த அரசு பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் கல்வி பயில பஸ் மூலம் விழுப்புரம் நகர பகுதிக்கு வந்து செல்கின்றனர். கிராமப்புற பகுதிகளிலிருந்து நகரப்பகுதிக்கு குறைந்த எண்ணிக்கையிலேயே பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பள்ளிக்கு செல்லக்கூடிய மாணவர்கள் வேறு பஸ் வசதி இல்லாததாலும், ஒரே பஸ்சில் செல்ல வேண்டிய கட்டாயத்தினாலும் அரசு பஸ்களின் படிக்கட்டுகள் மற்றும் மேற்கூரையில் தொங்கியபடி ஆபத்தான முறையில் பயணம் மேற்கொள்கின்றனர். பஸ்களில் ஆபத்தான முறையில் பயணிக்கக்கூடாது என்று மாவட்ட நிர்வாகமும், காவல்துறையும் பலமுறை அறிவுறுத்தியும் பஸ்சின் படிக்கட்டுகளில் பயணம் என்பது தொடர் கதையாகி வருகிறது.

விழுப்புரத்தில் இருந்து பில்லூருக்கு கூடுதல் பஸ்கள், பள்ளி நேரத்தில் இயக்க வேண்டுமென பெற்றோர்கள் கோரிக்கை வைத்தும் அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காததால் இதுபோன்ற ஆபத்தான முறையில் அரசு பள்ளி மாணவர்கள் பயணம் மேற்கொள்கின்றனர். காவல்துறை அதிகாரிகள், இதுபோன்ற ஆபத்தான பயணத்தை கட்டுப்படுத்த சில நாட்கள் மட்டும் பணியில் ஈடுபட்டுவிட்டு அதன் பின் கண்டும்காணாமலும் உள்ளனர். நேற்று பில்லூரில் இருந்து விழுப்புரம் புறப்பட்ட அரசு பஸ்சில் மாணவர்கள் ஆபத்தான முறையில் பயணம் மேற்கொண்ட வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனவே மாணவர்கள், பஸ்சின் படிக்கட்டில் ஆபத்தான பயணம் மேற்கொள்வதை தவிர்க்க நிரந்தர தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story