பள்ளி மாணவர்களின் சண்டையை சாதி சண்டையாக பார்க்க கூடாது - சபாநாயகர் அப்பாவு


பள்ளி மாணவர்களின் சண்டையை சாதி சண்டையாக பார்க்க கூடாது - சபாநாயகர் அப்பாவு
x

பள்ளி வளாகத்துக்குள் நடக்கும் மாணவர்கள் பிரச்சினைக்கு தலைமை ஆசிரியர்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

நெல்லை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவையில் 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். இதையொட்டி பாளையங்கோட்டை சேவியர் கல்லூரியில் நேற்று விழா நடைபெற்றது. இதில் சபாநாயகர் அப்பாவு கலந்துகொண்டு 'தமிழ்ப் புதல்வன்' திட்டத்தை தொடங்கி வைத்தார். அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பயின்று கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1,000 பெறுவதற்கான வங்கி பரிவர்த்தனை அட்டைகளை வழங்கினார்.

பின்னர் நிருபர்களுக்கு பேட்டியளித்த சபாநாயகர் அப்பாவு கூறும்போது, "பள்ளிகள் என்றாலே மாணவர்களிடையே சிறுசிறு பிரச்சினைகள் இருக்கத்தான் செய்யும். அவர்களுக்கு இடையிலான தகராறில் எந்த வன்மமும், இருக்காது. மாணவர்களின் சாதியை குறிப்பிட்டு செய்தி வெளியிடுவதை தவிர்க்கலாம். நெல்லையில் ஒரு சில பள்ளிகளில் மாணவர்களிடையே பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதனை சாதிய பிரச்சினையாக பார்க்க கூடாது.

பள்ளி வளாகத்துக்குள் நடக்கும் மாணவர்கள் பிரச்சினைக்கு தலைமை ஆசிரியர்கள் தலையிட்டு தீர்வு காணவேண்டும். இதுகுறித்து முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. நெல்லையில் எங்கும் சாதி சண்டை கிடையாது" என்ற கூறினார்.


Next Story