கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு


கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் - ஐகோர்ட்டு உத்தரவு
x

கொரோனாவினால் உயிரிழந்த முன்கள பணியாளர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்க விதிகளை உருவாக்க வேண்டும் என ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.

சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றிய தங்கலட்சுமி, கொரோனா சிகிச்சைப் பணியில் முன் கள பணியாளராக வேலை செய்தார். அப்போது அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி கடந்த 2020-ம் அவர் மரணம் அடைந்தார்.

கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள முன்கள பணியாளர்கள், தொற்று பாதித்து உயிரிழந்தால், ரூ. 50 லட்சம் இழப்பீடும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அப்போது அறிவித்தது.

அதன் அடிப்படையில், தனது மகளுக்கு அரசு வேலை வழங்கக் கோரி தங்கலட்சுமியின் கணவர் அருணாச்சலம், கொடுத்த மனுவை தமிழ்நாடு அரசு நிராகரித்து விட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில், அருணாச்சலம் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதி டி.கிருஷ்ணகுமார் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், "கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழங்கும் வகையில் விதிகள் எதுவும் வகுக்கப்படவில்லை என்பதால், அரசு பணியை பெற தகுதி இல்லை என்று விளக்கம் அளித்தார்.

இதையடுத்து, நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது,

கொரோனாவில் உயிரிழந்த முன்கள பணியாளர்களுக்கு இழப்பீடும், குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் வேலை வழக்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும். அதற்கான விதிகளை தமிழ்நாடு அரசு வகுக்க வேண்டும் என்று ஐகோர்ட்டு தலைமை நீதிபதி தலைமையிலான முதல் டிவிசன் பெஞ்ச் கடந்த மே 11-ந்தேதி உத்தரவிட்டுள்ளது. அந்த உத்தரவின்படி அரசு எந்த விதிகளையும் இதுவரை வகுக்கவில்லை. எனவே, உரிய விதிகளை அரசு உருவாக்க வேண்டும். அதுதொடர்பான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். விசாரணையை வருகிற ஆகஸ்டு 10-ந்தேதி தள்ளிவைக்கிறேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story