பணி வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்


பணி வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியல்
x

தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தில் வேலை வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

புதுக்கோட்டை

சாலை மறியல்

புதுக்கோட்டை மாவட்டம், ஆலங்குடி அருகே செம்பட்டிவிடுதி பஸ் நிறுத்தத்தில் நேற்று திடீரென 20-க்கும் மேற்பட்ட பெண்கள் ஒன்று கூடினர். இதையடுத்து ஊராட்சியில், தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களுக்கு ஒரு மாதத்துக்கும் மேலாக வேலை வழங்கப்படவில்லை. இதனை கண்டித்தும், வேலை உடனே வழங்க வலியுறுத்தியும் புதுக்கோட்டை- கறம்பக்குடி சாலையில் தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பெண்கள் மறியலில் ஈடுபட்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதுகுறித்து தகவல் அறிந்த செம்பட்டிவிடுதி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பின்னர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள் ஆணையரை வரச்சொல்லுங்கள் பேசிக் கொள்கிறோம் என்று கூறி மறியலை கைவிடாமல் தொடர்ந்தனர்.

இதையடுத்து அவர்களிடம் புதுக்கோட்டை ஆணையர் குமாரவேல் செல்போனில் தொடர்பு கொண்டு பேசினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த மறியலால் புதுக்கோட்டை-கறம்பக்குடி சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story